

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இஷான் கிஷன் தலைமையிலான ஹைதராபாத் அணி 6 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. கடைசியாக அந்த அணி, சிஎஸ்கேவை 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது. பாட் கம்மின்ஸ் இல்லாத நிலையிலும் கடந்த 2 ஆட்டங்களிலும் பெரிதும் அறியப்படாத இளம் வீரர்கள் குழு சிறப்பாக செயல்பட்டிருந்தது.
பிரஃபுல் ஹிங்கே, ஷகிப் ஹுசைன், ஷிவாங்க் குமார் ஆகியோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வெற்றிக்கான பங்களிப்பை வழங்கினர். இவர்கள் பந்துவீச்சு தாக்குதலில் வேகத்தையும், அதேநேரம் துல்லியமான கட்டுப்பாட்டையும் வெளிப்படுத்தினர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக பிரஃபுல் ஹிங்கேயின் அபாரமான பந்துவீச்சை தொடர்ந்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஈஷன் மலிங்கா தலைமையிலான பந்துவீச்சாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டனர்.
அந்தப் போட்டியில், டெத் ஓவர்களில் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்கள் மிகத் துல்லியமாகப் பந்துவீசியதால் சொந்த மண்ணில் அடுத்தடுத்து 2 வெற்றிகளைப் பதிவு செய்திருந்தது. பந்துவீச்சில் ஏற்பட்டுள்ள இந்த மறுமலர்ச்சியே அந்த அணியின் தற்போதைய வெற்றிப் பயணத்துக்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.
பேட்டிங்கை பொறுத்தவரையில் ஹைதராபாத் அணியின் அணுகுமுறை ஆக்ரோஷம் நிறைந்ததாகவே உள்ளது, ஆனால் அதற்கேற்ற பலன் சீராகக் கிடைக்கவில்லை. தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, 3-வது வீரராக களமிறங்கும் தற்காலிக கேப்டன் இஷான் கிஷன் ஆகிய மூவரும் ஒருங்கிணைந்த செயல் திறனை இன்னும் வெளிப்படுத்தவில்லை.
தொடக்க ஆட்டக்காரர்கள் இணைந்து ஒரு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுக்காத பட்சத்தில் மிடில் ஆர்டர் வீரர்கள் நெருக்கடியை சந்திப்பது வழக்கமாகி வருகிறது. இதன் விளைவாக, பெரும் சுமை ஹென்ரிச் கிளாசன் மீதே விழுகிறது. விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்த பிறகு களமிறங்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகும் கிளாசன், முதலில் அணியை மீட்டு எடுத்து, அதன் பின்னரே அதிரடியைத் தொடங்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்.
கிளாசன் மிகக் குறுகிய காலத்தில் அதிரடியாக ரன்களைக் குவிக்கும் திறன் கொண்டவர் என்றாலும், ஆரம்பத்திலேயே தனது இயல்பான ஆட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு அவர் தள்ளப்படுகிறார். இது அவரது பணியை கடினமாக்குகிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் டாப் 3 பேட்ஸ்மேன்கள் சீரான திறனை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும்.
கடந்த ஆட்டத்தில் 22 பந்துகளில் 59 ரன்கள் விளாசிய அபிஷேக் சர்மாவிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும். அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி 5 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 2 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.
கடைசியாக அந்த அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி-யை வீழ்த்தியிருந்தது. இந்த ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தியிருந்தனர். அதேவேளையில் இறுதிக்கட்ட ஓவர்களில் டேவிட் மில்லர் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.
தொடக்க வீரரான பதும் நிஷங்காவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதேவேளையில் முதல் 2 ஆட்டங்களில் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்த சமீர் ரிஸ்வியிடம் இருந்து அதன் பின்னர் பெரிய அளவிலான செயல் திறன் வெளிப்படவில்லை. கடைசி 3 ஆட்டங்களிலும் அவர், ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து இருந்தார். அணியில் தனது இடத்தை தக்கவைக்க வேண்டுமென்றால் சமீர் ரிஸ்வி மீண்டும் மட்டையை சுழற்ற வேண்டும்.
பந்துவீச்சை பொறுத்தவரையில் கடந்த சீசனில் அந்த அணியின் சிறந்த பந்துவீச்சாளராகத் திகழ்ந்த மிட்செல் ஸ்டார்க் தற்போது இல்லாத நிலையில், தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரான லுங்கி நிகிடி பந்துவீச்சுப் பிரிவை மிகச்சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அவர் ரன்களைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், விக்கெட்டுகளை வீழ்த்துவதும் பலமாக உள்ளது. நடப்பு சீசனில் அவர், 7 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
கேப்டன் அக்சர் படேலும் சிக்கனமாகப் பந்துவீசி, நடுஓவர்களில் ரன் குவிப்பை கட்டுப்படுத்தி வருகிறார். இருப்பினும், இடதுகை மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பான செயல் திறனை வழங்கவில்லை. அதே சமயம் வேகப்பந்து வீச்சாளர்களான முகேஷ் குமார், நடராஜன் ஆகியோர் ஒரு சில போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இருந்தனர். இவர்களுக்கு ஹைதராபாத் அணியின் பேட்டிங் வரிசை சவால் அளிக்கக்கூடும்.