

முல்லன்பூர்: ஐபிஎல் 2026 தொடரின் 40-வது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை் பதிவு செய்துள்ளது. இன்று (ஏப்ரல் 28) நடைபெற்ற இந்தப் போட்டியில், கடைசி ஓவர் வரை நீடித்த பரபரப்பில் ராஜஸ்தான் அணி வெற்றி இலக்கை எட்டியது.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் (59) மற்றும் பிரியான்ஷ் ஆர்யா (29) ஜோடி அதிரடியான தொடக்கத்தை அளித்தது. பின்னர் வந்த கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 30 ரன்கள் எடுக்க, ஆட்டத்தின் போக்கை மாற்றிய மார்கஸ் ஸ்டோய்னிஸ், வெறும் 22 பந்துகளில் 62 ரன்கள் (4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) விளாசினார்.
குறிப்பாக கடைசி ஓவரில் அவர் காட்டிய அதிரடியால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 222 என்ற வலுவான ஸ்கோரை எட்டியது. ராஜஸ்தான் தரப்பில் யாஷ் புஞ்சா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
223 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணிக்கு, வைபவ் சூர்யவன்ஷி 16 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அதிரடி தொடக்கம் தந்தார். அவருக்குத் துணையாக யஷஸ்வி ஜெய்சவால் 27 பந்துகளில் 51 ரன்கள் குவித்து அசத்தினார். இருப்பினும், நடுவரிசையில் யுஸ்வேந்திர சஹால் தனது மாயாஜால சுழலில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.
ஒரு கட்டத்தில் ஆட்டம் பஞ்சாப் பக்கம் சாய்வது போல் தெரிந்தபோது, டோனோவன் ஃபெரைரா (52) மற்றும் இம்பாக்ட் பிளேயராக வந்த ஷுபம் துபே (31) ஜோடி அதிரடியாக விளையாடி அணியை மீட்டனர். இவர்கள் இருவரும் இணைந்து 19.2 ஓவர்களிலேயே ராஜஸ்தான் அணி 228/4 ரன்கள் எடுத்து வெற்றி பெற உதவினர். 6 விக்கெட் வித்தியாசத்தில் பெற்ற இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து வருகிறது.