

லக்னோ: ஐபிஎல் 2026 தொடரின் 38-வது லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சூப்பர் ஓவர் முறையில் த்ரில் வெற்றி பெற்றது.
லக்னோ ஏகானா மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்தப் போட்டி, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, லக்னோவின் மொசின் கான் (5 விக்கெட்) வீசிய அனல் பறக்கும் பந்துவீச்சில் சிக்கி 93 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஆனால், துணை கேப்டன் ரிங்கு சிங் தனி ஆளாகப் போராடி 51 பந்துகளில் 83 ரன்கள் (7 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) விளாசினார். குறிப்பாக கடைசி ஓவரில் 4 சிக்ஸர்களைப் பறக்கவிட்ட அவர், அணியின் ஸ்கோரை 20 ஓவர்களில் 155/7 என உயர்த்தினார்.
156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணிக்கு ரிஷப் பண்ட் (42) மற்றும் ஆயுஷ் பதோனி (24) நல்ல அடித்தளம் அமைத்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முகமது ஷமி கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி ஆட்டத்தை சமன் (155/8) செய்தார். இதனால் வெற்றியாளரைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.
சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய லக்னோ அணிக்கு சுனில் நரைன் பந்துவீசினார். நரைனின் சுழலில் சிக்கிய நிக்கோலஸ் பூரன் மற்றும் எய்டன் மார்க்ரம் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, லக்னோ அணியால் வெறும் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. வெறும் 2 ரன்கள் என்ற மிக எளிய இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி, ரிங்கு சிங் அடித்த பவுண்டரியின் மூலம் முதல் பந்திலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.