

பெங்களூரு: ஐபிஎல் தொடரில் நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), 5 முறை சாம்பியனான சிஎஸ்கேவுடன் மோதியது. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதனால் ஆர்சிபி முதலில் பேட் செய்தது. முதல் ஓவரின் 4-வது பந்தில் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ரன் அவுட் ஆவதில் இருந்து தப்பித்த விராட் கோலி 7 ரன்கள் எடுத்திருந்த போது மிட் ஆன் திசையில் கொடுத்த கேட்ச்சை ஷிவம் துபே தவறவிட்டார். எனினும் அவர் நீண்ட நேரம் களத்தில் நிற்கவில்லை. 18 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்த நிலையில் அன்ஷுல் கம்போஜ் பந்தில் லாங் ஆன் திசையில் ஷிவம் துபேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல், பில் சால்ட்டுடன் இணைந்து அதிரடியாக விளையாடினார். மட்டையை சுழற்றிய பில் சால்ட் 30 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஷிவம் துபே பந்தில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு பில் சால்ட், தேவ்தத் படிக்கல் ஜோடி 37 பந்துகளில் 56 ரன்கள் குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய ரஜத் பட்டிதார் சிஎஸ்கே பந்து வீச்சை வெளுத்து வாங்கினார். ஷிவம் துபே வீசிய 13-வது ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உட்பட 23 ரன்கள் விளாசப்பட்டன. அதிரடியாக விளையாடிய தேவ்தத் படிக்கல் 29 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் விளாசிய நிலையில் ஜேமி ஓவர்டன் பந்தில் போல்டானார். 3-வது விக்கெட்டுக்கு தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதார் ஜோடி 21 பந்துகளில் 58 ரன்கள் விளாசியது.
இதன் பின்னர் டிம் டேவிட் களமிறங்கினார். கலீல் அகமது வீசிய 16-வது ஓவரில் ரஜத் பட்டிதார் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாசினார். நூர் அகமது வீசிய 17-வது ஓவரில் டிம் டேவிட் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார். அன்ஷுல் கம்போஜ் வீசிய அடுத்த ஓவரில் டிம் டேவிட் தலா ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்தார். ஜேமி ஓவர்டன் வீசிய 19-வது ஓவரில் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியை விளாசி மிரளச் செய்தார் டிம் டேவிட்.
அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 21 பந்துகளில் அரை சதம் அடித்தார். இந்த ஜோடியின் அதிரடியால் ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 250 ரன்கள் குவித்தது. டிம் டேவிட் 25 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 70 ரன்களும், ரஜத் பட்டிதார் 19 பந்துகளில், 6 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 48 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 36 பந்துகளில் 99 ரன்கள் விளாசி அசத்தியது.
இதையடுத்து 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த சிஎஸ்கே அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 7, சஞ்சு சாம்சன் 9 ரன்களில் ஜேக்கப் டஃபி பந்தில் ஆட்டமிழந்தனர். ஆயுஷ் மாத்ரே 1 ரன்னில் புவனேஷ்வர் பந்தில் நடையை கட்டினார். 30 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் சர்ஃபராஸ் கான் அதிரடியாக விளையாடினார்.
மட்டையை சுழற்றிய சர்ஃபராஸ் கான் 25 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடுன் 50 ரன்கள் விளாசிய நிலையில் கிருணல் பாண்டியா பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். இதைத் தொடர்ந்து கார்த்திக் சர்மா 6 ரன்னில் நடையை கட்டினார். நிதானமாக விளையாடிய ஷிவம் துபே 13 பந்துகளில், 18 ரன்கள் எடுத்த நிலையில் அபிநந்தன் சிங் பந்தில் ஆட்டமிழந்தார். 10 ஓவர்களில் சிஎஸ்கே அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்தது.
7-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜேமி ஓவர்டன், பிரசாந்த் வீர் உடன் இணைந்து அதிரடியாக விளையாடினார். சிறப்பாக விளையாடி வந்த பிரசாந்த் வீர் 29 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஷ்வர் குமார் பந்தில் ஆட்டமிழந்தார். ஜேமி ஓவர்டன் 16 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்த நிலையில் சுயாஷ் சர்மா பந்தில் வெளியேறினார்.
இதையடுத்து நூர் அகமது 8 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டாக மேட் ஹென்றி 2 ரன்களில் அபிநந்தன் சிங் பந்தில் வெளியேறினார். முடிவில் சிஎஸ்கே அணி 19.4 ஓவர்களில் 207 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அன்ஷுல் கம்போஜ் 19 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தார். ஆர்சிபி அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். ஜேக்கப் டஃபி, அபிநந்தன் சிங், கிருணல் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி 4 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. சிஎஸ்கே அணிக்கு இது ஹாட்ரிக் தோல்வியாக அமைந்தது. அந்த அணி முதல் ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடமும், 2-வது ஆட்டத்தில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடமும் தோல்வி அடைந்திருந்தது.
சிக்ஸரில் சாதனை
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவுக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் விளாசிய அணி என்ற சாதனையை ஆர்சிபி படைத்தது. நேற்றைய ஆட்டத்தில் ஆர்சிபி 19 சிக்ஸர்களை விளாசியிருந்தது. இந்த வகையில் இதற்கு முன்னர் 2018-ல் கொல்கத்தாவும், 2020-ல் ராஜஸ்தான் அணியும் சிஎஸ்கேவுக்கு எதிராக தலா 17 சிக்ஸர்களை அடித்திருந்தன.