

குவாஹாட்டி: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் இலக்கை அடைய முடியாமல் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த தோல்வியால் இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 0-1 என பின்தங்கி உள்ளது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 22ம் தேதி குவாஹாட்டியில் தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணியினர் நேற்று கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு குவாஹாட்டி வந்து சேர்ந்தனர். இந்திய அணியினருடன் முதல் டெஸ்ட் போட்டியில் கழுத்து பகுதியில் காயம் அடைந்த கேப்டன் ஷுப்மன் கில்லும் குவாஹாட்டி வந்தடைந்தார்.
இன்றும், நாளையும் இந்திய அணி வீரர்கள் குவாஹாட்டி மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இந்த பயிற்சியின் போது ஷுப்மன் கில் உடற்தகுதியை நிரூபிக்க முயற்சி செய்யக்கூடும். 26 வயதான கில், இன்னும் 100 சதவீதம் உடற்தகுதியை எட்டவில்லை. அவரது கழுத்தின் பின்புறத்தில் வலி இன்னும் உள்ளது. இருப்பினும் அதன் தீவிரம் கணிசமாகக் குறைந்துள்ளதாக அணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவக்குழு அளித்த சிகிச்சைக்கு ஷுப்மன் கில் நன்கு ஒத்துழைத்தார். அவர், சக அணி வீரர்களுடன் குவாஹாட்டிக்கு சென்றுள்ளார். அங்கு தொடர்ந்து பிசிசிஐ கண்காணிப்பில் இருப்பார். ஷுப்மன் கில் 2-வது டெஸ்ட்டில் விளையாடுவாரா என்பது சூழ்நிலையைப் பொறுத்து தீர்மானிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஷுப்மன் கில் 2-வது டெஸ்டில் விளையாடுவாரா? என்பதில் சந்தேகம் தொடர்ந்த வண்ணம் உள்ளது. மருத்துவ ரீதியாக கில் உடற்தகுதியை எட்டினாலும் 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டியில், அவர் மீண்டும் காயம் அடைந்தால் வெகுநாட்கள் கிரிக்கெட் விளையாட முடியாத நிலை உருவாகும். இதையும் பிசிசிஐ கவனத்தில் எடுத்துக்கொள்ளக்கூடும்.