

புதுடெல்லி: நடப்பு ஐபிஎல் சீசனில் சனிக்கிழமை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் களத்தில் ஃபீல்ட் செய்த போது டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் லுங்கி இங்கிடி காயமடைந்தார். இந்நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளதாக டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளிடையிலான போட்டியில் டெல்லி அணி ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தபோது, பஞ்சாப் வீரர் பிரியான்ஷ் அடித்த பந்தை பின்புறமாக ஓடிச் சென்று லுங்கி இங்கிடி பிடிக்க முயன்றார். ஆனால் பந்தைப் பிடிக்காமல் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவர் தலையில் அடிபட்டு மயக்கமடைந்தார்.
இதையடுத்து மருத்துவர்கள் மைதானத்துக்கு வந்து அவரைப் பரிசோதித்தனர். இதைத் தொடர்ந்து மைதானத்துக்குள் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் கரோல் பாக்கிலுள்ள மேக்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நலமுடன் உள்ளார், விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காயமடைந்த லுங்கி இங்கிடியை மைதானத்தில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தடையில்லாதா வழிப்பாதையான ‘கிரீன் காரிடர்’ வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம் வெகு சில நிமிடங்களில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.