

கட்டாக்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கட்டாக்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி 20 ஆட்டத்தில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா 28 பந்துகளில 59 ரன்களை விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு 16 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
இடது காலில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக கடந்த 2 மாதங்களாக ஹர்திக் பாண்டியா, சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். தற்போது காயத்தில் இருந்து மீண்டு புத்துணர்ச்சியுடன் அணிக்கு திரும்பி தனது அதிரடியால் பலம் சேர்த்துள்ளார்.
ஆட்ட நாயகன் விருது வென்ற ஹர்திக் பாண்டியா பிசிசிஐ டி.வி.க்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: காயத்திலிருந்து மீண்டு அணிக்குள் திரும்ப வரும்போது வலுவாகவும், பெரிதாகவும் வரவேண்டும் என நினைத்திருந்தேன்.
காயம் நமது மனவலிமையை அதிகமாக சோதிக்கும். சில நேரங்களில் அது நமக்கு சந்தேகங்களையும் உருவாக்கும். என்னை நேசிப்பவர்களுக்குதான் இந்தப் பாராட்டுகள் செல்ல வேண்டும்.
நான் பலமாக இருந்தேன். பல விஷயங்களை நன்றாகச் செய்தேன். அதெல்லாம் எனக்கு தன்னம்பிக்கையை அளித்தது. ஒரு வீரராக எனது திறமையை நம்பினேன். உங்களை நீங்களே நம்பவில்லை என்றால், மற்றவர்கள் எப்படி உங்களை நம்புவார்கள். இந்த கருத்தில் எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.