

கட்டாக்: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் கட்டாக்கில் நேற்று நடைபெற்றது.
இதில் முதலில் பேட் செய் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 28 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சர்வதேச டி 20 அரங்கில் ஹர்திக் பாண்டியா அடித்த 6-வது அரை சதமாக இது அமைந்தது. மேலும் இந்த போட்டியில் அவர், 4 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம் சர்வதேச டி 20-ல் 100 சிக்ஸர்கள் விளாசிய 4-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
அவர், 121-வது ஆட்டத்தில் இந்த மைல் கல்லை எட்டியுள்ளார். இந்த வகை சாதனையில் இந்திய வீரர்களில் ரோஹித் சர்மா (205), சூர்யகுமார் யாதவ் (155), விராட் கோலி (124) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.