

புதுடெல்லி: இந்தியாவில் நடைபெறும் டி 20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பது குறித்து நாளைக்குள் (ஜனவரி 21) வங்கதேச கிரிக்கெட் வாரியம் முடிவு எடுக்க வேண்டும் இல்லையென்றால் வேறு அணி சேர்க்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) எச்சரிக்கை விடுத்துள்ளது.
டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் வங்கதேச அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், இத்தாலி, நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. வங்கதேச அணி பங்கேற்கும் லீக் ஆட்டங்கள் கொல்கத்தா, மும்பையில் நடைபெறுகிறது.
இதற்கிடையே வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் கடந்த ஆண்டு இந்திய அணியின் வங்கதேச சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் வங்கதேச மகளிர் அணியின் இந்திய வருகையும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்டாபிஸுர் ரஹ்மானை வாங்கியிருந்தது.
ஆனால் பிசிசிஐ-யின் அறிவுறுத்தல் காரணமாக அவரை, கொல்கத்தா அணி விடுவித்தது. இதற்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து இந்தியாவில் தங்களது அணிக்கு பாதுகாப்பு இருக்காது அதனால் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்தேசம் விளையாடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என ஐசிசி-யிடம் கோரிக்கை வைத்தது.
ஆனால் வங்கதேசத்தின் குற்றச்சாட்டு மீது எந்தவித உண்மையும் இல்லை. வங்கதேச அணிக்கு இந்தியாவில் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என ஐசிசி தெரிவித்தது. இதையடுத்து 2 பேர் அடங்கிய ஐசிசி குழு கடந்த சனிக்கிழமை டாக்கா சென்று வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போதும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் தனது முடிவில் விடாப்பிடியாக இருந்தது.
டி 20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக இந்தியா செல்லமாட்டோம். எங்கள் அணி பங்கேற்கும் ஆட்டங்களை இலங்கையில் நடத்த வேண்டும். அதற்கு தகுந்தபடி தங்கள் அணி இடம் பெற்றுள்ள குரூப்பை மாற்ற வேண்டும் என கூறியது. அதாவது தற்போது ‘சி’ பிரிவில் உள்ள வங்கதேச அணியை ‘பி’ பிரிவுக்கு மாற்ற வேண்டும் எனவும் கூறியது.
‘பி’ பிரிவில் இலங்கை, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமன், ஜிம்பாப்வே அணிகள் உள்ளன. இதில் அயர்லாந்துக்கு பதிலாக தங்களது அணியை இடம் பெறச் செய்தால் அனைத்து ஆட்டங்களையும் இலங்கையிலேயே நடத்த முடியும் எனவும் ஆலோசனையை முன் வைத்தது. ஆனால் ஐசிசி தரப்பில் போட்டி தொடங்குவதற்கு சில வாரங்களே உள்ளதால் அட்டவணை, பயண விவரங்களை மாற்ற முடியாது என தெரிவிக்கப்பட்டது.
மேலும் வரும் 21-ம் தேதிக்குள் (நாளை) டி 20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அன்றைய தினத்துக்குள் முடிவு செய்யாவிட்டால் வங்கதேச அணிக்கு பதிலாக வேறு அணி டி 20 உலகக் கோப்பையில் சேர்க்கக் கூடும் எனவும் ஐசிசி தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை டி 20 உலகக் கோப்பையில் வங்கதேச அணி பங்கேற்காவிட்டால் அந்த அணிக்கு மாற்றாக தகுதிச் சுற்றில் பங்கேற்ற அணிகளில் சிறந்த தரவரிசையில் உள்ள ஸ்காட்லாந்து அணி விளையாடக்கூடும்.