

வெற்றிக் கொண்டாட்டத்தில் பெல்ஜியம் வீரர்
சியாட்டிலில் லூமென் ஃபீல்ட் மைதானத்தில் நடைபெற்ற ஃபிபா உலகக்கோப்பை ரவுண்ட் 32 ஆட்டத்தில் 2 கோல்களை வாங்கி பின்னிலையிலிருந்து மீண்டெழுந்த பெல்ஜியம் பிறகு 3 கோல்களை அடித்து செனெகல் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஹபீப் டியாரா மற்றும் இஸ்மாயிலா சார் ஆகியோர் செனகல் அணியை 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறச் செய்தனர்; ரோமெலு லுக்காகு மற்றும் யூரி டீலெமன்ஸ் ஆகியோர் ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தனர்; இறுதியில், கூடுதல் நேரத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி டீலெமன்ஸ் வெற்றி கோலை அடித்தார்.
பெல்ஜியம் கேப்டன் யூரி டீலெமான்ஸின் சர்ச்சைக்குரிய எக்ஸ்ட்ரா டைம் கோல் நிச்சயம் பேசுபொருளாகும். இது போன்ற வி.ஏ.ஆர். சர்ச்சைகள் ஏற்கெனவே இந்த உலகக்கோப்பைப் போட்டிகளில் கடும் சர்ச்சைகளை எழுப்பி வருகிறது. வெளியேறிய அணிகள் சிலவற்றின் நியாயமான கோல்கள் வீடியோ ரெஃபரலில் கால் கட்டை விரல் மட்டும் கோட்டைத் தாண்டி ஆஃப் சைட் என்றெல்லாம் தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் அதே வேளையில் சில அணிகள் இந்தக் கோளாறுகளினால் தகுதியற்ற பயன்களை ஈட்டியது என்ற பேச்சுக்கள் கிளம்பியுள்ளன.
செனகலுக்கு எதிராக தொடர்ச்சியாக 2வது முறை பெனால்டி:
கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆப்பிரிக்க கோப்பை இறுதிப் போட்டியில், மொராக்கோ அணிக்கு ஆட்டத்தின் இறுதியில் பெனால்டி கிக் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து செனகல் அணி மைதானத்தை விட்டு வெளியேறியது. அதன் விளைவாக, செனகல் அணியின் பட்டம் பறிக்கப்பட்டது.
ஆனால் இம்முறை அப்படிப்பட்ட கூத்துக்கள் எதுவும் நிகழவில்லை. ஆட்டம் தொடங்கி 124 நிமிடங்கள் 44 வினாடிகள் ஆன நிலையில், டீலெமேன்ஸ் பதற்றமின்றி உலகக் கோப்பை வரலாற்றிலேயே மிகத் தாமதமான கோலை அடித்து, பெல்ஜியத்தை அடுத்த சுற்றுக்கு முன்னேற்றினார். இதில் சர்ச்சை என்னவெனில் 7 நிமிடங்கள் இந்த வீடியோ ரிவியூ சென்றது. ஏன் இத்தனை தாமதம்? கடைசியில் தப்பாக ஸ்பாட் கிக் கொடுக்கவா என்ற கேள்வியே எஞ்சியது.
செனெகல் அபார முன்னிலை:
இடைவேளையின் போது செனகல் அணி தகுதியான முறையில் முன்னிலை பெற்றிருந்தது. ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில், செனெகல் வீரர் சார் தலையால் முட்டிய பந்து கம்பத்தில் பட்டுத் திரும்பியபோது, தியாரா அதை மீண்டும் கோலாக மாற்றினார்.
பின்னர், இரண்டாம் பாதி தொடங்கி 6-வது நிமிடத்திலேயே மீண்டும் வீரர் சார் முன்னிலையை இரட்டிப்பாக்கினார். பெல்ஜியத்தின் தடுப்பாட்ட வீரர்களைப் பிளந்து வந்த ஒரு நீண்ட பந்தை அவர் தனது மார்பால் அற்புதமாகக் கட்டுப்படுத்தி, கோலாக மாற்றினார்.
பெல்ஜிய ஜோடியான கெவின் டி ப்ரூய்ன் மற்றும் ஜெர்மி டோகு ஆகியோர் 56-வது நிமிடத்தில் எதிர்பாராதவிதமாக வெளியேற்றப்பட்டனர். மேலும், 35 வயதான டி ப்ரூய்னுக்கு இதுவே உலகக் கோப்பையில் கடைசி ஆட்டமாக இருக்கும் என்று தோன்றியது.
இருப்பினும், ஆட்டத்தின் வழக்கமான நேரம் முடிய நான்கு நிமிடங்கள் இருந்தபோது, அவரது நாப்போலி அணி வீரரும், பாதி நேர மாற்று வீரருமான லுகாகு, பெல்ஜியத்தின் முதல் இலக்கு நோக்கிய ஷாட்டை கோலாக மாற்றி, ஒரு நம்பமுடியாத மீள் எழுச்சிக்கு வித்திட்டார்.
இரண்டு நிமிடங்கள் மற்றும் 39 வினாடிகளுக்குப் பிறகு, லியாண்ட்ரோ ட்ரோசார்டின் கிராஸிலிருந்து வந்த பெல்ஜியத்தின் இரண்டாவது இலக்கு நோக்கிய ஷாட்டை டீலெமான்ஸ் தலையால் முட்டி கோலாக மாற்றி செனகலை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
இந்த பின்னிலையிலிருந்து பெல்ஜியம் எழுச்சி பெற்றது அபாரமான உலகக்கோப்பை எழுச்சி என்றாலும் கடைசியில் அந்த பெனால்டி தீர்ப்பு பல ஆண்டுகளுக்கு சர்ச்சையாகவே நீடிக்கும். செனெகல் ‘நமக்கு மட்டும் ஏண்டா இப்படி நடக்கிறது’ என்ற பாவனையில் அந்து நொந்து வெளியேறினர்.