

கன்சாஸ் சிட்டி: உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் ஜே பிரிவு லீக் ஆட்டத்தில் அல்ஜீரியா, ஆஸ்திரியா அணிகள் மோதிய ஆட்டம் 3-3 என்ற கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
இந்த ஆட்டம் கன்சாஸ் சிட்டியிலுள்ள ஆரோஹெட் மைதானத்தில் நேற்று காலை 7.30 மணிக்கு தொடங்கியது. அல்ஜீரியா அணிக்காக ரபிக் பெல்காலி 45-வது நிமிடத்தில் ஒரு கோலும், ரியாய் மாரெஸ் 60, 90+3-வது நிமிடத்தில் 2 கோல்களும் அடித்தனர். ஆஸ்திரியா அணிக்காக மார்க்கோ அர்ணாவ்டோவிக் (28-வது நிமிடம்), மார்செல் சாபிடைசர் (55-வது நிமிடம்), சசா கலாஜ்ட்ஜிக் (90+6-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.
இறுதிவரை இந்த நிலை நீடிக்கவே ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. லீக் சுற்றின் முடிவில் ஜே பிரிவில் அர்ஜெண்டினா 9 புள்ளிகளும், ஆஸ்திரியா, அல்ஜீரியா ஆகிய அணிகள் தலா 4 புள்ளிகளும் பெற்று நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறின.
இங்கிலாந்து அபார வெற்றி
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் எல் பிரிவு சுற்றில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் பனாமா அணியைத் தோற்கடித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. குரூப் எல் பிரிவில் லீக் ஆட்டங்களின் முடிவில் இங்கிலாந்து 7 புள்ளிகளும், குரோஷியா 6 புள்ளிகளும், கானா 4 புள்ளிகளும் பெற்று நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறின.
காங்கோ முன்னேற்றம்
கே பிரிவு லீக் ஆட்டத்தில் காங்கோ அணி 3-1 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி நாக்-அவுட் சுற்றில் கால்பதித்தது. கே பிரிவு லீக் சுற்றின் முடிவில் கொலம்பியா 7 புள்ளிகளும், போர்ச்சுகல் 5 புள்ளிகளும், காங்கோ 4 புள்ளிகளும் பெற்று நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன.