

ஐபிஎல் 2026 சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்காக ரூ.32.30 கோடியை செலவிட்டுள்ளது. மினி ஏலத்துக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சனை ரூ.18.10 கோடிக்கு டிரேடிங் முறையில் சிஎஸ்கே அணி வாங்கியிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற வீரர்கள் மினி ஏலத்தில் 19 வயதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கார்த்திக் சர்மாவை பலத்த போட்டிக்கு இடையே சிஎஸ்கே அணி வாங்கியது.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் சர்வதேச போட்டியில் விளையாடாத வீரரை அதிக தொகைக்கு ஏலம் எடுத்த அணியாக சிஎஸ்கே மாறியது. தற்போது தோனியுடன் சேர்த்து சிஎஸ்கே அணியில் 4 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் உள்ளன. ஏற்கெனவே தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உர்வில் படேலும் உள்ளார். 2008 முதல் தோனியை மட்டுமே பிரதானமாக நம்பி உள்ள சிஎஸ்கே அணியின் இந்த அணுகுமுறை புதிதாக பார்க்கப்படுகிறது.
முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஏலத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால் தோனி தனது ஐபிஎல் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கக்கூடும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அணியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில், இளம் வீரர்களை கொண்டு புத்துணர்ச்சியான அணியை கட்டமைக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏலத்தின் போது சிஎஸ்கே அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெமிங் கூறும்போது, “தோனி ஏதேனும் ஒரு கட்டத்தில் அணியில் இருந்து நகர்ந்து செல்வார். சஞ்சு சாம்சன் சர்வதேச தரம் வாய்ந்த வீரர். அவர், தோனியின் இடத்தை நிறைவு செய்யக்கூடும். சில நேரங்களில் கடந்த கால வெற்றியின் காரணமாக நாங்கள் கோட்பாடுகள் மற்றும் தத்துவங்களை இறுகப்பற்றி இருந்தோம். ஆனால் நாங்கள் மாற வேண்டும் என்பதை உணர்ந்தோம்” என்றார்.
சிஎஸ்கே அணி நேற்று முன்தினம் நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் கைவசம் வைத்திருந்த ரூ.43.40 கோடியில் 60 சதவீதத்தை சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்களுக்காக செலவு செய்தது. இதன் மூலம் கடந்த காலங்களில் ‘டாடி ஆர்மி’ என அழைக்கப்பட்ட சிஎஸ்கே அணி தற்போது ‘பேபி ஆர்மி’ ஆக மாற்றம் கண்டுள்ளது.
44 வயதான தோனி இதுவரை ஓய்வு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும் 2025-ம் ஆண்டு சீசனின் போது அவர், “நான் எனது தொழில் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன் என்பதில் இருந்து தப்பிக்க முடியாது” என்று கூறியிருந்தார்.
மேலும் இந்த சீசனில் சிஎஸ்கேவின் கடைசிப் போட்டிக்குப் பிறகு, “நான் முடித்துவிட்டேன் என்று சொல்லவில்லை, ஆனால் நான் மீண்டும் அணிக்குத் திரும்பவும் உறுதியளிக்கவில்லை” எனவும் தோனி குழப்பத்துடன் கூறியிருந்தார். சிஎஸ்கே அணிக்காக கடந்த சீசன்களில் விளையாடிய ராபின் உத்தப்பா கூறும்போது, “2026-ம் ஆண்டு எம்.எஸ். தோனியின் கடைசி சீசனாக இருக்கும்” என்றார்.
5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி இந்த ஆண்டு கடைசி இடத்தையே பிடித்து இருந்தது. அணியின் எதிர்காலத்தை கட்டமைக்கும் வகையிலேயே தற்போது இளம் வீரர்கள் அதிகளவில் அணிக்குள் கொண்டுவரப் பட்டுள்ளனர். அதிலும் தோனிக்கு பிறகு அதிரடியாக விளையாடக்கூடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் மீது அதிக கவனம் குவிக்கப்பட்டுள்ளது.