சென்னை: இன்றைய ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 74 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. சிஎஸ்கே அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்துடன் களமிறங்கியது. சிஎஸ்கே அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 4 தோல்விகளுடன் 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி தொடக்கம் முதலே தடுமாறியபடியே ஆடியது. சென்னை அணி 21 ரன்கள் எடுத்திருந்த போது, 11 ரன்களுடன் களத்தில் இருந்த சஞ்சு சாம்சன் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் உர்வில் படேலும் 4 ரன்களில் அவுட்டானார். அதன்பின்னர் சிராஜ் வீசிய ஓவரில் சர்ஃபராஸ் கான் டக் அவுட் ஆனார்.
அடுத்தடுத்து விக்கெட் விழுந்ததால் சென்னை அணி ரன்கள் எடுக்க தடுமாறியது. ஒருபக்கம் கெய்க்வாட் நிதானமாக விளையாடினாலும், மறுபக்கம் பிரெவிஸ் 2 ரன்களிலும், ஷிவம் துபே 22 ரன்களிலும், கார்த்திக் ஷர்மா 15 ரன்களிலும், ஓவர்டன் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
சென்னை அணி ரன்கள் எடுக்க தடுமாறினாலும், கடைசி 2 ஓவர்களில் சிறப்பாக ஆடினர். இதன்காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கெய்க்வாட் 60 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். குஜராத் அணி தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளையும், அர்ஷாத் கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.