

மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியா சந்தோக் திருமணம் மும்பையின் இன்று (மார்ச் 5) நடைபெற்றது. இதில் சச்சின் குடும்பத்தினருடன் விளையாட்டு, தொழில் துறையினர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைத் துறையை சேர்ந்த பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.
மும்பையின் தெற்கு பகுதியில் பிரத்யேக நிகழ்வாக இந்த திருமண விழா நடைபெற்றது. இதில் சச்சின் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியா சந்தோக் ஜோடிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த திருமண விழாவில் இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான சுனில் கவாஸ்கர், ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே, ரவி சாஸ்திரி, யுவராஜ் சிங், கவுதம் கம்பீர், இர்பான் பதான், யூசுப் பதான், விரேந்தர் சேவாக், சுரேஷ் ரெய்னா, ஆகாஷ் சோப்ரா, ஜாஹிர் கான், ஹர்பஜன் சிங், பார்த்திவ் படேல், தாவால் குல்கர்னி, அஜித் அகர்கர், திலீப் வெங்சர்கர், ஸ்ரேயாஸ் கோபால், வெங்கடேஷ் பிரசாத், பிரக்யான் ஓஜா உள்ளிட்டோர் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். ஐசிசி தலைவர் ஜெய் ஷாவும் இதில் பங்கேற்றார்.
தொழிலதிபர் முகேஷ் அம்பானி - நீதா அம்பானி இணையர், நட்சத்திர ஜோடியான அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் பச்சன், மகாராஷ்டிரா மாநில முதல்வர் அஷிஷ் ஷெலர் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.
அர்ஜுன் டெண்டுல்கர்: 26 வயதான அர்ஜுன் டெண்டுல்கர், உள்ளூர் கிரிக்கெட்டில் கோவா அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் 2021 முதல் 2025 வரையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி இருந்தார். இடது கை பவுலர்.
சானியா சந்தோக், தொழிலதிபர் கய் குடும்பத்தை சேர்ந்தவர். லண்டனில் படித்து பட்டம் பெற்றவர். இவர்களின் திருமணத்துக்கு முன்னதாக மெஹந்தி நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டது.