

சேலம்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு - பரோடா அணிகள் இடையிலான ஆட்டம் சேலத்தில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்று பேட் செய்த பரோடா அணி 72 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது. ஷிவாலிக் சர்மா 35, ஜோத்ஸ்னில் சிங் 10, ஷஸ்வத் ராவத் 5, விஷ்ணு சோலங்கி 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். 5-வது விக்கெட்டுக்கு சுக்ரித் பாண்டே, நினாத் ரத்வா ஜோடி நிதானமாக விளையாடி பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தது. 85 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை சாய் கிஷோர் பிரித்தார்.
நினாத் ரத்வா 112 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்த நிலையில் சாய் கிஷோர் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் அதித் ஷேத்தும் நிதானமாக விளையாடினார். முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் பரோடா அணி 90 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது.
சுக்ரித் பாண்டே 222 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 73 ரன்களும், அதித் ஷேத் 104 பந்துகளில், 45 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். தமிழ்நாடு அணி சார்பில் ஜெகநாதன் ஹெம்சுதேஷன் 3 விக்கெட்களையும், சாய் கிஷோர் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். கைவசம் 5 விக்கெட்கள் இருக்க பரோடா அணி இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.