

துபாய்: இலங்கையில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நடத்த வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) நிராகரித்துள்ளது.
வங்கதேசத்தில் நடைபெற்ற இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம் கிரிக்கெட்டிலும் எதிரொலித்து வருகிறது. தாக்குதல் சம்பவத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) ஐபிஎல் அணியில் இடம்பெற்றுள்ள வங்கதேச வீரர் முஸ்டாபிஸுர் ரஹ்மானை நீக்கவேண்டும் என்று பாஜக, சிவசேனா, இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அவர் கேகேஆர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் விளையாட வங்கதேசம் மறுத்துவிட்டது.
பாதுகாப்பு கருதி தங்கள் அணி மோதும் ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று ஐசிசி-யிடம் வலியுறுத்தியுள்ளது. ஆனால், வங்கதேசத்தின் இந்தக் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
மேலும், ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிகளை இந்தியாவில்தான் வங்கதேச அணி விளையாட வேண்டும். இல்லையென்றால் அந்த அணி புள்ளிகளை இழக்க நேரிடும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி எச்சரித்ததாக தெரிகிறது. ஐசிசி சார்பில், வங்கதேச கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுடன் காணொலி மூலம் இந்த உத்தரவை ஐசிசி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அதேநேரத்தில் ஐசிசி-யிடம் இருந்து தங்களுக்கு எந்தவிதமான இறுதி எச்சரிக்கையும் இதுவரை வரவில்லை என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.
வங்கதேசம் ‘சி’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. அந்த அணி மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் பிப்ரவரி 7-ம் தேதியும், இத்தாலியுடன் 9-ம் தேதியும், இங்கிலாந்துடன் 14-ம் தேதியும், நேபாளத்துடன் 17-ம் தேதியும் மோதுகிறது. கொல்கத்தா, மும்பையில் இந்த ஆட்டங்கள் நடைபெறுகின்றன.