

மிர்பூர்: வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்பூர் நகரில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 413 ரன்களும், பாகிஸ்தான் 386 ரன்களும் எடுத்தன. 27 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 70.3 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.
அதிகபட்சமாக கேப்டன் நஜ்முல் ஹோசைன் ஷான்டோ 87, மொமினுல் ஹக் 56 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து 268 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி 52.5 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அப்துல்லா பாஸல் 66, சல்மான் ஆகா 26, சவுத் ஷகீல் 15, முகமது ரிஸ்வான் 15, அஸான் அவைஸ் 15 ரன்கள் சேர்த்தனர்.
வங்கதேச அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளரான நஹித் ராணா 5 விக்கெட்களை வீழ்த்தினார். தஸ்கின் அகமது, தைஜுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 16-ம் தேதி சைல்ஹெட் நகரில் தொடங்குகிறது.