

சிட்னி: சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த தொடரை ஆஸ்திரேலியா அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு பிறகு ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா கடந்த வாரம் அறிவித்து இருந்தார். இந்த தொடரில் அவர் ஒரு அரை சதம் மட்டுமே அடித்திருந்தார். அவரது கடைசி இன்னிங்ஸிலும் ஏமாற்றத்தை அளித்தார்.
நேற்றைய போட்டியில் அவர் 6 ரன்கள் மட்டுமே சேர்த்து ரசிகர்களை ஏமாற்றினார். இதைத் தொடர்ந்து கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக கவாஜா அறிவித்தார். சக அணி வீரர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
39 வயதான உஸ்மான் கவாஜா 88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6,229 ரன்களைக் குவித்துள்ளார். சராசரி 42.95 ஆகும். 16 சதமும், 28 அரைசதமும் எடுத்துள்ளார்.
ஆஷஸ் தொடருக்கு பிறகு ஓய்வு பெற்ற 7-வது ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா ஆவார். இதற்கு முன்பு ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன், டேமியன் மார்ட்டின், ஜஸ்டின் லாங்கர், ஷேன் வார்னே, கிளென் மெக்ராத், மைக்கேல் கிளார்க் ஆகியோரும் ஆஷஸ் தொடருக்கு பிறகு ஓய்வு பெற்றனர்.
அதிக ரசிகர்கள் வருகை:
இந்த ஆஷஸ் கிரிக்கெட் தொடரை அதிக ரசிகர்கள் நேரில் கண்டுகளித்து சாதனை படைத்துள்ளனர். 5 போட்டிகள் கொண்ட இந்த ஆஷஸ் தொடரைக் காண மொத்தமாக 8 லட்சத்து 59 ஆயிரத்து 580 ரசிகர்கள் வருகை தந்துள்ளனர்.
கடந்த ஆண்டு இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மொத்தமாக 8 லட்சத்து 37 ஆயிரத்து 879 பேர் வருகை தந்த நிலையில் அந்த வருகை சாதனையை இந்த ஆண்டு ஆஷஸ் தொடர் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.