

புதுடெல்லி: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து வீரர் டேரில் மிட்செல் மீது பந்தை எறிந்தார் இந்திய பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங். அவரது செயலுக்காக 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில், அதற்காக மிட்செலிடம் அர்ஷ்தீப் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
“நீங்கள் உங்கள் தேசத்துக்காக விளையாடும் போது இயல்பாகே களத்தில் ஆக்ரோஷம் வெளிப்படும். எந்தவொரு பந்து வீச்சாளரும் தனது பந்து வீச்சில் இரண்டு சிக்ஸர்கள் கொடுப்பதை விரும்ப மாட்டார். பந்தை பற்றி, அதை திரும்ப எறிவதில் என்ன தவறு இருக்கிறது? இது மாதிரியான ரெஸ்பான்ஸை தான் நான் எனது வீரர்களிடம் எதிர்பார்க்கிறேன்.
அர்ஷ்தீப் செயலில் தவறு ஏதும் இல்லை. அவர் மன்னிப்பு தெரிவிக்க இல்லை என்றாலும் அது சரி என்று நான் கருதுகிறேன். அவர் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை” என பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற கம்பீர் தெரிவித்தார்.
என்ன நடந்தது? - கடந்த 8-ம் தேதி அன்று ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூஸிலாந்தை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. இந்த போட்டியில் நியூஸிலாந்து அணியின் பேட் செய்த போது 11-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசியிருந்தார்.
அந்த ஓவரின் 4-வது பந்தை நியூஸிலாந்து அணியின் பேட்ஸ்மேன் டேரில் மிட்செல் அடித்த போது பந்து அர்ஷ்தீப் வசம் வந்தது. அப்போது பந்தை எடுத்த அவர், ஆக்ரோஷமாக ஸ்டெம்புகளை நோக்கி வீசிய போது டேரில் மிட்செல் மீது பலமாக பட்டது.
ஸ்டெம்புகளை விட்டு விலகி நின்றிருந்த போதும் அர்ஷ்தீப் சிங், தன் மீது பந்தை எறிந்ததால் ஆத்திரம் அடைந்த டேரில் மிட்செல் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். களநடுவரும், கேப்டன் சூர்யகுமார் யாதவும் தலையிட்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்திருந்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஐசிசி-யின் நன்னடத்தை விதிகளை மீறியதாக அர்ஷ்தீப் சிங்குக்கு போட்டியின் ஊதியத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு தகுதியிழப்பு புள்ளியும் அர்ஷ்தீப் சிங்குக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
இந்த சூழலில் களத்தில் நடந்த அந்த சம்பவம் எதிர்பாராமல் நடந்ததாக அர்ஷ்தீப் தெளிவுப்படுத்தி இருந்தார். மேலும், மிட்செலிடம் அவர் மன்னிப்பு கோரியதும் குறிப்பிடத்தக்கது.