

கால்பந்து நட்சத்திர வீரர் மெஸ்ஸி
பியூனஸ் அய்ரஸ்: கால்பந்து விளையாட்டின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது என்பது குறித்து அர்ஜெண்டினா கால்பந்து சங்க தலைவர் கிளாடியோ டாபியா தெரிவித்துள்ளார்.
39 வயதான மெஸ்ஸி, அர்ஜெண்டினா அணிக்காக விளையாடி வருகிறார். அவரது தலைமையிலான அர்ஜெண்டினா அணி, ஃபிபா கால்பந்து தொடரில் 2022-ல் சாம்பியன் பட்டமும், 2014 மற்றும் 2026-ல் இரண்டாம் இடமும் பிடித்தது. தன் தாயகத்துக்காக 125 கோல்களை மெஸ்ஸி பதிவு செய்துள்ளார். பல்வேறு சாதனைகளை அவர் படைத்துள்ளார். கிளப் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.
இந்நிலையில், அவரது ஓய்வு குறித்து அர்ஜெண்டினா கால்பந்து சங்க தலைவர் கிளாடியோ டாபியா, தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
“ஓய்வு முடிவு முற்றிலும் அவரது வசம்தான் உள்ளது. அது அவரது தனிப்பட்ட முடிவாகவே இருக்கும். இப்போது அவர் சற்று இளைப்பாற வேண்டும். 2022 ஃபிபா உலகக் கோப்பை தொடரின் போது, அவர் 2026-ல் விளையாடுவாரா என்பது எங்களுக்கு தெரியாது?
அப்போது அவரிடம் கேட்ட போது ஒவ்வொரு ஆட்டமாக பார்க்கலாம் என்றார். அப்போது அந்த கட்டத்தில் அவரின் சிறந்த வெர்ஷனை நாம் பார்த்தோம். அவர் கால்பந்து விளையாட்டை அனுபவித்து விளையாட அனுமதிக்க வேண்டும். அதன் பின்னர் தனக்கு எது சரி என்பதை சரியான தருணத்தில் அவரே முடிவு செய்வார்.
நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதை நாம் எல்லோரும் கண்டு மகிழ்ந்தோம். அவரது செயல்பாட்டை எண்ணி பெருமை கொள்ள வேண்டும். இந்த உலகக் கோப்பையில் எங்களை பொறுத்தவரையில் அவரே சிறந்த வீரர். ஒவ்வொரு ஆட்டத்திலும் சாதனை படைத்தார்” என்று கிளாடியோ டாபியா தெரிவித்தார்.
அடுத்த உலகக் கோப்பை தொடர் 2030-ல் நடைபெறுகிறது. அப்போது மெஸ்ஸி 43 வயதை எட்டி இருப்பார். அந்த தொடர் ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் மொராக்கோவில் நடைபெறுகிறது. ஃபிபா தொடரின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அர்ஜெண்டினா, உருகுவே, பராகுவே நாட்டில் தலா ஒரு ஆட்டம் அந்தத் தொடரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.