

புதுடெல்லி: காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று நாடு திரும்பிய இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு விமானநிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில் பங்கேற்று தங்களது விளையாட்டுகள் முடிந்த நிலையில் இந்திய அணியில் ஒரு பிரிவினர் நேற்று காலை தாயகம் திரும்பினர்.
டெல்லி இந்திரா காந்தி விமானநிலையத்தில் வந்திறங்கிய வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற மீராபாய் சானு, ஆடவர் பிரிவில் வெள்ளி வென்ற லவ்பிரீத் சிங் ஆகியோருக்கு ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்து வரவேற்றனர்.
மீராபாய் சானு, காமன்வெல்த் விளையாட்டில் தொடர்ச்சியாக 3-வது தங்கத்தைக் கைப்பற்றியிருந்தார். அதேபோல் ஆடவர் +110 கிலோ பிரிவில் வெள்ளியை லவ்பிரீத் சிங் வென்றிருந்தார். மேலும், மகளிர் 58 பளுதூக்குதல் பிரிவில் வென்ற இந்திய வீராங்கனை பிந்தியாராணி தேவி சோரோகாய்பாமுக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த காமன்வெல்த் போட்டியின் பளுதூக்குதல் பிரிவில் இந்தியா ஒரு தங்கம், 6 வெள்ளி, ஒரு வெண்கலத்தைக் கைப்பற்றியிருந்தது. வீரர், வீராங்கனைகளுடன் அணியின் பளுதூக்குதல் பிரிவு தலைமைப் பயிற்சியாளர் விஜய் சர்மாவும் வந்திருந்தார்.