Published : 27 May 2023 06:59 AM
Last Updated : 27 May 2023 06:59 AM

IPL 2023 | 2 முறை தப்பித்த கில் - மும்பை அணியை குஜராத் வீழ்த்தியது எப்படி?

அகமதாபாத்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி. நாளை நடைபெறும் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற தகுதி சுற்று-2 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 233 ரன்கள் குவித்தது.ரித்திமான் சாஹா 16 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்த நிலையில் பியூஸ் சாவ்லா பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். முதல் விக்கெட்டுக்கு ஷுப்மன் கில்லுடன் இணைந்து ரித்திமான் சாஹா 6.2 ஓவர்களில் 54 ரன்கள் சேர்த்தார்.

ஷுப்மன் கில், ஆகாஷ் மத்வால் வீசிய 12-வது ஓவரில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார். அதன் பின்னர் பியூஸ் சாவ்லா வீசிய அடுத்த ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியையும், கேமரூன் கிரீன் வீசிய 15-வது ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியும் அடித்தார் ஷுப்மன் கில். அதிரடியாக விளையாடிய அவர், 49 பந்துகளில் சதம் விளாசினார்.

இதன் மூலம் பிளே ஆஃப் சுற்றில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ரித்திமான் சாஹா (2014-ம் ஆண்டு இறுதிப் போட்டி), ரஜத் பட்டிதார் (2022-ம் ஆண்டு எலிமினேட்டர் ஆட்டம்) ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார் ஷுப்மன் கில். மட்டையை சுழற்றிய ஷுப்மன் கில் 60 பந்துகளில், 10 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 129 ரன்கள் குவித்த நிலையில் ஆகாஷ் மத்வால் பந்தில் ஆட்டமிழந்தார்.

அவருக்கு உறுதுணையாக விளையாடிய சாய் சுதர்சன் 31 பந்துகளில், 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 43 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 13 பந்துகளில் 28 ரன்களும் ரஷித் கான் 5 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

234 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடக்கம் அதிர்ச்சியாக இருந்தது நேஹல் வதேரா 4, கேப்டன் ரோஹித் சர்மா 8 ரன்களில் மொகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தனர். எனினும் அடுத்து களமிறங்கிய திலக் வர்மா அதிரடியாக விளையாடினார். மட்டையை சுழற்றிய அவர், 14 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் விளாசிய நிலையில் ரஷித் கான் பந்தில் போல்டானார். தொடர்ந்து கேமரூன் கிரீன் 20 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்த நிலையில் லிட்டில் ஜோஷ்வா பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.

சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தபோதும் சூர்யகுமார் யாதவ் மட்டையை சுழற்றினார். கடைசி 6 ஓவர்களில் மும்பை அணியின் வெற்றிக்கு 85 ரன்கள் தேவையாக இருந்தது. மோஹித் சர்மா வீசிய 15-வது ஓவரின் 2-வது பந்தை சிக்ஸருக்கு விளாசிய சூர்யகுமார் யாதவ் அடுத்த பந்தை விக்கெட் கீப்பருக்கு பின்னால் திருப்ப முயன்ற போது போல்டானார். 38 பந்துகளை சந்தித்த சூர்யகுமார் யாதவ் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் சேர்த்தார்.

இதே ஓவரில் விஷ்ணு வினோத்தும் (5) வெளியேறினார். இதன் பின்னர் மும்பை அணியின் நம்பிக்கை தளர்ந்தது. 16-வது ஓவரை வீசிய ரஷித் கான், அதிரடி வீரரான டிம் டேவிட்டை (2) எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றினார். தொடர்ந்து கிறிஸ் ஜோர்டான் (2), பியூஸ் சாவ்லா (0) ஆகியோர் மோஹித் சர்மா வீசிய 17-வது ஓவரில் நடையை கட்டினர்.

கடைசியாக குமார் கார்த்திகேயா (6) வெளியேற மும்பை அணி 18.2 ஓவர்களில் 171 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது. குஜராத் அணி தரப்பில் மோஹித் சர்மா 5, மொகமது ஷமி 2, ரஷித் கான் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி குஜராத் டைட்டன்ஸ் அணி நாளை (28-ம் தேதி) இதே மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

பவர் பிளேவில் விக்கெட் வேட்டை: மும்பை அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமி பவர் பிளேவில் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஓர் சீசனில் பவர் பிளேவில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். ஷமி இதுவரை இந்த சீசனில் பவர் பிளேவில் 17 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். இந்த வகையில் இதற்கு முன்னர் 2020-ம் ஆண்டு மும்பை அணிக்காக விளையாடிய டிரெண்ட் போல்ட்
16 விக்கெட்கள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

2 முறை தப்பித்த கில்: கிறிஸ் ஜோர்டான் வீசிய 6-வது ஓவரில் ஷுப்மன் கில் தலா ஒரு சிக்ஸர், பவுண்டரியை விரட்டினார். இதே ஓவரின் 5-வது பந்தில் ஷுப்மன் கில் மிட் ஆன் திசையில் கொடுத்த கேட்ச்சை டிம் டேவிட் தவறவிட்டார். அப்போது ஷுப்மன் கில் 30 ரன்களில் இருந்தார். தொடர்ந்து 58 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை கேமரூன் கிரீன் தவறவிட்டார். இந்த இரு வாய்ப்புகளையும் அவர், சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

சீசனில் அதிக ரன்: ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 851 ரன்களுடன் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார் ஷுப்மன் கில். அவருக்கு அடுத்த இடத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பாஃப் டு பிளெஸ்ஸிஸ் (730) உள்ளார். அதேவேளையில் ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் அதிக ரன்களை வேட்டையாடியவர்களின் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். அவர், 2016-ம் ஆண்டு தொடரில் 973 ரன்கள் குவித்திருந்தார். இந்த பட்டியலில் ஷுப்மன் கில் 851 ரன்களுடன் தற்போது 3-வது இடத்தில் இருக்கிறார்.

சிறப்பான ரன் வேட்டை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் அணி 233 ரன்கள் குவித்தது. ஐபிஎல் தொடரில் குஜராத் அணி குவித்த அதிகபட்ச ரன்களாக இது அமைந்தது. இதற்கு முன்னர் இந்த சீசனில் லக்னோ அணிக்கு எதிராக குஜராத் 227 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது. மேலும் ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆஃப் சுற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற பெருமையையும் குஜராத் அணி பெற்றுள்ளது. இதற்கு முன்னர் 2014-ம் ஆண்டு தொடரில் சிஎஸ்கேவுக்கு எதிராக பஞ்சாப் அணி 226 ரன்கள் குவித்திருந்தது.

அதிக சிக்ஸர்கள்: ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆஃப் சுற்றின் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளார் ஷுப்மன் கில். மும்பை அணிக்கு எதிராக அவர், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 10 சிக்ஸர்களை பறக்கவிட்டிருந்தார். இந்த வகையில் இதற்கு முன்னர் அதிகபட்சமாக 2014-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய ரித்திமான் சாஹா 8 சிக்ஸர்கள் விளாசியிருந்தார்.

இளம் வயதில் சாதனை: ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆஃப் சுற்றில் சதம் அடித்த 7-வது பேட்ஸ்மேன் மற்றும் முதல் இளம் வீரர் என்ற மைல் கல் சாதனையை படைத்துள்ளார் ஷுப்மன் கில். சதம் அடித்த போது ஷுப்மன் கில்லுக்கு 23 வயது 260 நாட்கள் ஆகியிருந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஷுப்மன் கில் 129 ரன்கள் விளாசினார். இதன் மூலம் அவர், ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆஃப் சுற்றில் ஓர் ஆட்டத்தில் அதிகபட்ச ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இதற்கு முன்னர் 2014-ம் ஆண்டு தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய சேவக் 122 ரன்கள் விளாசியதே சாதனையாக இருந்தது.

3ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் விராட் கோலி, ஜாஸ் பட்லர் ஆகியோர் தலா 4 சதங்களுடன் முதலிடம் வகிக்கின்றனர். விராட் கோலி 2016-ம் ஆண்டும், ஜாஸ் பட்லர் 2022-ம் ஆண்டும் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தனர். இவர்களுக்கு அடுத்தபடியாக இந்த சீசனில் ஷுப்மன் கில் 3 சதங்கள் அடித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x