Published : 26 May 2023 07:55 AM
Last Updated : 26 May 2023 07:55 AM

ஐபிஎல் இறுதிப் போட்டியில் நுழைவது யார்? - குஜராத் vs மும்பை இன்று பலப்பரீட்சை

கோப்புப்படம்

ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியானது பிளே ஆஃப்பின் தகுதி சுற்று-1 ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சிஎஸ்கேவிடம் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. தற்போது மீண்டும் ஒரு முறை அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இம்முறை சொந்த மண்ணில் விளையாடுவதால் குஜராத் அணிக்கு கூடுதல் பலம் கிடைக்கக்கூடும்.

15 ஆட்டங்களில் 55.53 சராசரியுடன் 2 சதங்கள், 4 அரை சதங்கள் உட்பட 722 ரன்களை வேட்டையாடி உள்ள ஷுப்மன் கில், மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சாளர்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கக்கூடும். அதேவேளையில் 12 ஆட்டங்களில் 301 ரன்கள் சேர்த்து சில பயனுள்ள பங்களிப்புகளை வழங்கிய விஜய் சங்கரும் சவால் அளிக்கக்கூடும். இவர்கள் இருவரும் லீக் சுற்றின் இறுதிப் பகுதியில் எதிரணியின் பந்து வீச்சாளர்களுக்கு கடும் அழுத்தம் கொடுத்திருந்தனர். எனினும் சேப்பாக்கத்தில் நடைபெற்ற தகுதி சுற்று-1 ஆட்டத்தில் இவர்கள் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினர். இதனால் இலக்கை துரத்திய குஜராத் அணி கரைசேராமல் போனது.

குஜராத் அணி 2-வது முறையாக இறுதிப் போட்டியில் கால்பதிக்க வேண்டுமென்றால் இவர்கள் இருவருடன் கேப்டன் ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர் ஆகியோரும் பேட்டிங்கில் உயர்மட்ட திறனை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். ஹர்திக் பாண்டியா கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் 45 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். அதேவேளையில் டேவிட் மில்லர் இந்த சீசனில் ஒரு அரை சதம் கூட இன்னும் அடிக்கவில்லை. கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களில் மில்லர், இரட்டை இலக்க ரன்களை எட்டவில்லை.

பந்து வீச்சை பொறுத்தவரையில் 26 விக்கெட்களை வேட்டையாடி உள்ள மொகமது ஷமி,25 விக்கெட்களை கைப்பற்றி உள்ள ரஷித் கான் ஆகியோருடன் நூர் அகமது, மொஹித் சர்மாஆகியோரும் பலம் சேர்ப்பவர்களாக திகழ்கின்றனர். ஷமியின் துல்லியமான தாக்குதலும், ரஷித் கானின் சுழலும் மும்பை பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் கடைசி அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. எனினும் அந்த அணி கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளது. மும்பை அணியானது சேப்பாக்கத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் 81 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை தோற்கடித்து தகுதி சுற்று-2-ல் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது. எலிமினேட்டர் ஆட்டத்தில் ஆகாஷ் மத்வால் தனது வேகப்பந்து வீச்சால் மாயாஜாலம் செய்திருந்தார்.

3.3 ஓவர்களை வீசி 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வேட்டையாடி லக்னோ அணியை வேரோடு சாய்க்க பெரிதும் உதவியிருந்தார் மத்வால். நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரீத் பும்ரா, ஜோப்ரா ஆர்ச்சர்ஆகியோர் இல்லாத நிலையில் 29 வயதான மத்வால், மும்பை அணியின் பந்து வீச்சு துறைக்கு புதிய உத்வேகம் அளித்துள்ளார்.

15 ஆட்டங்களில் 21 விக்கெட்கள் கைப்பற்றி உள்ள சீனியர் சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லா, 14 விக்கெட்கள் வீழ்த்தி உள்ள ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் ஆகியோரும் உறுதுணையாக செயல்படக்கூடும். கடந்த சில ஆட்டங்களாக அதிக ரன்களை விட்டுக்கொடுத்த கிறிஸ் ஜோர்டான், எலிமினேட்டர் ஆட்டத்தில் 2 ஓவர்களை வீசி ஒரு மெய்டனுடன் 7 ரன்கள் மட்டும் வழங்கி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.

பார்முக்கு திரும்பி உள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த பந்து வீச்சு வெளிப்படக்கூடும். பேட்டிங்கில் கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹல் வதேரா, திலக் வர்மா ஆகியோர் அணியின் முதுகெலும்பாக உள்ளனர். இஷான் கிஷன், ரோஹித் சர்மா ஆகியோரும் மட்டையை சுழற்றினால் அணியின் பலம் அதிகரிக்கும்.

3: இந்த சீசனில் குஜராத் - மும்பை அணிகள் 3வது முறையாக சந்திக்கின்றன. கடந்த ஏப்ரல் 25ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தது குஜராத் டைட்டன்ஸ். இந்த ஆட்டத்தில் குஜராத் 207 ரன்களை வேட்டையாடி இருந்தது. இந்த தோல்விக்கு வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் பதிலடிகொடுத்தது. சூர்யகுமார் சதம் விளாசிய அந்த ஆட்டத்தில் மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x