

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் 53 ஓவர்கள் வீசி 19 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ரவீந்திர ஜடேஜா. ஐபிஎல் கிரிக்கெட்டில் மொத்தம் 151 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இருந்தாலும் அவ்வப்போது தனது கருத்துகளால் சிஎஸ்கே ரசிகர்களை அப்செட் செய்து வருகிறார்.
‘தோனி களம் காண வேண்டுமென என்னை வெளியேற சொல்கிறார்கள்’, ‘உங்கள் கர்மா நிச்சயம் உங்களை தேடி வரும்’, ‘அவர்களுக்குத் தெரிகிறது... ஆனால், சில ரசிகர்களுக்கு அது தெரியவில்லை’ என தொடர்ச்சியாக நடப்பு சீசனில் சர்ச்சைக்கு இடம் அளிக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார். இதில் கடைசியாக அவர் செய்த ட்வீட், நேற்று குஜராத் அணியுடனான வெற்றிக்குப் பிறகு செய்தது. ஆட்டத்தில் Most Valuable Player என்ற விருதை அவர் பெற்றதும் இப்படிச் சொல்லி இருந்தார்.
இந்தச் சூழலில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த சிவாஜி படத்தில் ‘நம்ம வீட்டுக்கு வாங்க’ என சாலமன் பாப்பையா சொல்வது போல ‘ஆர்சிபி-க்கு வருக’ என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரசிகர்கள் ஜடேஜாவுக்கு சொல்லி வருகின்றனர்.
‘அப்போ அடுத்த வருஷம் ஜட்டு (ஜடேஜா) ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்பார்’, ‘மீண்டும் சிஎஸ்கே vs ஜடேஜா. ஆர்சிபி-க்கு வாங்க ஜட்டு’, ‘ஆர்சிபி-க்கு வாங்க. சேர்ந்தே தோற்போம்’, ‘தோனியின் நிழலில் இருந்து டூப்ளசி, அஸ்வின் போல வெளியேறுங்கள்’, ‘ஆர்சிபி-க்கு வாங்க. ராஜாவை போல பாத்துக்குறோம்’ என சில ட்வீட்கள் வலம் வருகின்றன.
கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து பாதியிலேயே விலகினார் ஜடேஜா. அதன் பிறகு அவர் சிஎஸ்கே அணியில் விளையாடுவாரா என்ற கேள்வியும் எழுந்தது. இருப்பினும் நடப்பு சீசனில் சென்னை அணிக்காக அவர் விளையாடி வருகிறார்.