Published : 08 Sep 2017 09:31 AM
Last Updated : 08 Sep 2017 09:31 AM
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் 1981-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக முழுக்க முழுக்க அமெரிக்க வீராங்கனைகள் மோதவுள்ளனர். இதன் மூலம் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க வீராங்கனைகளின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான அரை இறுதிச் சுற்றுக்கு 2 முறை இங்கு பட்டம் வென்ற வீனஸ் வில்லியம்ஸ், ஸ்லோன் ஸ்டீபன்ஸ், 20ம் -நிலை வீராங்கனையான கொகோ வாண்டேவேஹ், 15-ம் நிலை வீராங்கனையான மேடிசன் கீஸ் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். இந்த 4 வீராங்கனைகளும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த 1981-ம் ஆண்டில் பார்பரா பாட்டர், மார்டினா நவரத்திலோவா, கிறிஸ் எவர்ட், டிராசி ஆஸ்டின் ஆகிய அமெரிக்க வீராங்கனைகள், இத்தொடரின் அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தனர். அதன் பிறகு அமெரிக்க வீராங்கனைகள் நால்வர் இத்தொடரின் அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும்.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள மேடிசன் கீஸ், “அரை இறுதிச் சுற்றுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த 4 வீராங்கனைகள் முன்னேறி இருப்பது சிறப்பான தருணமாகும். அந்த 4 பேரில் நானும் ஒருவர் என்பதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது. இந்த சாதனைப் பட்டியலில் என் பெயரும் சேர்ந்திருப்பதில் மகிழ்ச்சி” என்றார்.
வீனஸ் வில்லியம்ஸ் கூறும்போது, “அமெரிக்க டென்னிஸ் உலகுக்கு இது மகிழ்ச்சியான செய்தி. அரை இறுதியில் 4 அமெரிக்க வீராங்கனைகள் மோதுவது அமெரிக்காவில் டென்னிஸ் மீண்டும் வளர்ந்து வருவதைக் காட்டுகிறது. எதிர்காலத்திலும் இது தொடரும் என்று நம்புகிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT