Published : 05 May 2023 09:03 AM
Last Updated : 05 May 2023 09:03 AM

எதிரணியை கட்டுப்படுத்த வழியை கண்டறிய வேண்டும்: ரோஹித் சர்மா அறிவுறுத்தல்

ரோஹித் சர்மா

மொகாலி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் மொகாலியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. 215 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை அணி இஷான் கிஷன் 41 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் விளாசிய 75 ரன்களாலும், சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில், 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் விளாசிய 66 ரன்களாலும் 7 பந்துகள் மீதம் வைத்து வெற்றி கண்டது.

இறுதிப் பகுதியில் திலக் வர்மா 10 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 26 ரன்களும், டிம் டேவிட் 10 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 19 ரன்களும் சேர்த்து தங்களது பங்களிப்பை வழங்கினர். இந்த சீசனில் ஜோப்ரா ஆர்ச்சர் இருந்த போதிலும் மும்பை அணியின் பந்துவீச்சு சீரானதாக இல்லை. அந்த அணியின் பந்துவீச்சு துறை தொடர்ச்சியாக 4-வது முறையாக 200 ரன்களுக்கு மேல் எதிரணியை குவிக்க அனுமதித்துள்ளது. இதில் இரு முறை மட்டுமே மும்பை அணி இலக்கை வெற்றிகரமாக துரத்தியிருந்தது. இரு ஆட்டங்களில் தோல்வியை சந்தித்திருந்தது.

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

பந்து வீச்சு துறை நாங்கள் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. கடந்த 4 ஆட்டங்களாக தொடர்ச்சியாக 200 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்துள்ளோம். நடு ஓவர்களில் ரன்குவிப்பை கட்டுப்படுத்துவதற்கான வழிகளை நாங்கள் கண்டறிய வேண்டும். அதேவேளையில் தற்போதைய நிலையில் சராசரி ரன்குவிப்பு என்பது பெரிய அளவில் மாற்றம் அடைந்துள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

டி20 வடிவத்தை தொடங்கும்போது 140 முதல் 150 ரன்கள் வெற்றி பெறுவதற்கு போதுமானதாக இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாறி உள்ளது. இந்த சீசனில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனும் (இம்பேக்ட் பிளேயர் விதியின் கீழ் களமிறங்கும் வீரர்) இருப்பது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. இது எங்களுக்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்த தொடருக்கும் உள்ளது. இந்த சீசனில் சராசரி ஸ்கோர் என்பது 180 ஆக இருக்கிறது.

சூர்யகுமார் யாதவின் ஆட்டத்தை கண்டு எந்த ஆச்சர்யமும் அடையவில்லை. கடந்த சில வருடங்களாகவே அவர், இதை செய்து வருகிறார். விக்கெட் கீப்பருக்கு பின்புறம் பந்தை விளாசுவதுதான் அவரது பலம். அதை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார். சூர்யகுமார் யாதவும், இஷான் கிஷனும் அற்புதமாக பேட் செய்தார்கள். அவர்களை தொடர்ந்து டிம் டேவிட்டும், திலக் வர்மாவும் ஆட்டத்தை சிறப்பாக நிறைவு செய்தனர்.

இந்த சீசன் தொடங்குவதற்கு முன்னர் நாங்கள் எந்த வகையிலான கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பது குறித்து ஆலோசித்தோம். அப்போது பேட்டிங்கில் களத்துக்குள் இறங்கி முடிவை பற்றி கவலைப்படாமல் பயம் இல்லாத கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என விரும்பினோம். முடிவுகளைப் பற்றி நீங்கள் அடிக்கடி நினைக்கும் போது, உங்கள் திட்டங்களிலிருந்து விலகிச் செல்கிறீர்கள். இதனால் பயமில்லாமல் விளையாட வேண்டும் என்று ஆரம்பத்திலேயே பேசினோம்.

இவ்வாறு ரோஹித் சர்மா கூறினார்.- பிடிஐ

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x