Published : 21 Apr 2023 07:42 AM
Last Updated : 21 Apr 2023 07:42 AM

டு பிளெஸ்ஸிஸ் அதிரடி, சிராஜின் அசத்தல் பந்து வீச்சால் பெங்களூரு அணிக்கு 3-வது வெற்றி: பஞ்சாபை வீழ்த்தியது

ஆர்சிபி வீரர்கள்

மொகாலி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. அந்த அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது.

மொகாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 174 ரன்கள் குவித்தது. கேப்டன் விராட் கோலி 47 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 59 ரன்களும், ‘இம்பேக்ட் பிளேயர்’ விதியின் கீழ் களமிறங்கிய டு பிளெஸ்ஸிஸ் 56 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 84 ரன்களும் விளாசினர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 16.1 ஓவரில் 137 ரன்களை வேட்டையாடியது. கிளென் மேக்ஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமல் ஹர்பிரீத் பிரார் பந்தில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் 7 ரன்னில் அர்ஷ்தீப் பந்தில் நடையை கட்டினார். மஹிபால் லாம்ரோர் 7, ஷாபாஷ் அகமது 5 ரன்கள் சேர்த்தனர். பஞ்சாப் அணி தரப்பில் ஹர்பிரீத் பிரார் 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.

175 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பஞ்சாப் அணி தொடக்கத்திலேயே ஆட்டம் கண்டது. அதர்வா தைடே 4, லியாம் லிவிங்ஸ்டன் 2 ரன்களில் மொகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தனர். மேத்யூ ஷார்ட் 8 ரன்னில் ஹசரங்கா பந்தில் போல்டானார். ஹர்பிரீத் சிங் பாட்டியா (13), கேப்டன் சாம் கரண் (10) ஆகியோர் ரன் அவுட் ஆனார்கள். 9.5 ஓவர்களில் 76 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து பஞ்சாப் அணி தடுமாறியது. சீராக விளையாடி வந்த பிரப்சிம்ரன் சிங் 30 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் வெய்ன் பார்னல் பந்தில் போல்டானார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷாருக்கான் 7 ரன்களில் ஹசரங்கா பந்தில் தினேஷ் கார்த்திக்கால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். கடைசி 7 ஓவர்களில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 65 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் ஜிதேஷ் சர்மா, ஹர்பிரீத் பிரார் ஜோடி போராடி அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றது. 3 ஓவர்களில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் 18-வது ஓவரை வீசிய மொகமது சிராஜ் இரு விக்கெட்களை வீழ்த்தி ஆட்டத்தை பெங்களூரு அணியின் பக்கம் திருப்பினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ஹர்பிரீத் பிராரையும் (13), கடைசி பந்தில் நேதன் எலிஸையும் (0) ஸ்டெம்புகள் சிதற வெளியேற்றினார் மொகமது சிராஜ்.

வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து அவர், கைப்பற்றிய இந்த இரு விக்கெட்களும் பெரிய அளவில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்த நிலையில் அர்ஷ்தீப் சிங்குடன் இணைந்து போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட ஜிதேஷ் சர்மா, ஹர்ஷல் படேல் வீசிய 19-வது ஓவரின் 2-வது பந்தை பேக்வேர்டு பாயிண்ட் திசையில் தூக்கி அடித்த போது ஷாபாஷ் அகமதுவிடம் கேட்ச் ஆனது.

இதனால் பஞ்சாப் அணியின் இன்னிங்ஸ் 18.2 ஓவர்களில் 150 ரன்களுக்கு முடிவடைந்தது. ஜிதேஷ் சர்மா 27 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் சேர்த்தார். பெங்களூரு அணி சார்பில் மொகமது சிராஜ் 4 ஓவர்களை வீசி 21 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். ஹசரங்கா 2 விக்கெட்களையும் வெய்ன் பார்னல், ஹர்ஷல் படேல்ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் 6 புள்ளிகளுடன் பெங்களூரு அணி புள்ளிகள் பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறியது. 6 ஆட்டங்களில் விளையாடி உள்ள பெங்களூரு அணி 3 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.

கேப்டனாக விராட் கோலி

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் பீல்டிங் செய்வதற்கான உடற்தகுதியுடன் இல்லாததால் அவர், ‘இம்பேக்ட் பிளேயர்’ விதியின் கீழ் களமிறங்கினார். இதனால் விராட் கோலி கேப்டனாக பெங்களூரு அணியை வழிநடத்தினார். டு பிளெஸ்ஸிஸ் இடத்தில் பந்து வீச்சின் போது விஜயகுமார் வைசாக் களமிறக்கப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x