

ஜெய்ப்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனின் 26-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது லக்னோ அணி. இந்த நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து விளக்கம் கொடுத்திருந்தார் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் குமார் சங்ககாரா.
“எங்கள் அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. ரவி பிஷ்னோய் அருமையாக பந்து வீசினார். அவரது பந்தை மூன்று, நான்கு சிக்ஸர் விளாச நாங்கள் கமிட் ஆகவில்லை. இந்த ஆடுகளம் சவாலானதாக இருந்தது. அவர்களது பந்து வீச்சும் ஸ்மார்ட்டாக இருந்தது. அதே நேரத்தில் நாங்கள் அடித்து ஆட தவறினோம்.
இறுதி நேரத்தில் களத்திற்கு வந்து சிக்ஸர் விளாச வேண்டும் என்பதுதான் ரியான் பராக்கிற்கு நாங்கள் வகுத்துள்ள திட்டம். துரதிர்ஷ்டவசமாக அவர் நல்ல ஃபார்மில் இல்லை. வலைப்பயிற்சியில் அவர் சிறப்பாக பேட் செய்கிறார். அவரது சிக்கலை அடையாளம் கண்டு, அதற்கு தீர்வு காண முயற்சிப்போம். எங்கள் வீரர்களை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம்” என சங்ககாரா தெரிவித்துள்ளார்.
ரியான் பராக், இந்தப் போட்டியில் 12 பந்துகளுக்கு 15 ரன்கள் எடுத்திருந்தார். கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், ராஜஸ்தான் அணி வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதனால் அவரது ஆட்டத்தை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். அவரது ஐபிஎல் கிரிக்கெட் செயல்பாடு குறித்தும் கருத்து தெரிவித்து வருவதை பார்க்க முடிகிறது.