“ஐபிஎல் போட்டிகளில் வீரர்களை ‘வளர்த்து’ விடுகிறார் தோனி” - ஆகாஷ் சோப்ரா புகழாரம்
மும்பை: மற்ற அணிகள் எல்லாம் வீரர்களை தேடுகிறது. ஆனால், தோனி தனது தலைமையின் கீழ் வீரர்கள் வளர வாய்ப்பு கொடுக்கிறார் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ஆர்சிபி அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
“பெங்களூருவுக்கு எதிராக ரஹானே களத்தில் பேட் செய்த வரை அபாரமாக ஆடி இருந்தார். துபேவும் சிறப்பாக பேட் செய்தார். அவர் இதற்கு முன்னர் ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காக விளையாடி உள்ளார். மற்ற அணிகளுக்கும், தோனிக்கும் இருக்கும் வித்தியாசம் என்னவென்றால். மற்ற அணிகள் வீரர்களை தேடுகின்றன. தோனியோ தனது தலைமையின் கீழ் அவர்களுக்கு வளர வாய்ப்பு கொடுக்கிறார். அதன் மூலம் வளர்த்துவிடுகிறார்.
அவருக்கு கீழ் வீரர்களின் அபார செயல்பாட்டை பார்க்கவே அழகாக உள்ளது. மனதை கவர்கிறது. அதுவும் ரஹானே ஃபுள் ஷாட்டில் சிக்ஸர் விளாசியது அருமை. கான்வே சுதந்திரமாக விளையாடுகிறார்” என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்திருந்தது. 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பெங்களூரு விரட்டியது. அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
