

புதுடெல்லி: அடுத்த 10 ஆண்டுகளில் கிரிக்கெட் உலகை இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷுப்மன் கில் ஆள்வார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹேடன் கூறினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் மேத்யூ ஹேடன் கூறியதாவது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார். அனைத்து விதமான போட்டிகளிலும் அவர் அபாரமாக ஆடி வருகிறார்.
அண்மையில் டெஸ்ட் போட்டிகளில் 2 சதங்களை விளாசினார். ஒருநாள் போட்டிகளில் 4 சதங்களை அடித்தார். சர்வதேச டி20 போட்டியில் ஒரு சதத்தை எடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது ஐபிஎல் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அபாரமாக ஆடி வருகிறார்.அடுத்த 10 ஆண்டுகள் வரை அவர் கிரிக்கெட் உலகை ஆள்வார் என்பதில் சந்தேகமில்லை.
பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியில் தரமான பந்துவீச்சாளர்கள் உள்ளனர். எனவே போட்டியின் கடைசி வரை விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல ஒருவர் தேவைப்பட்டார். அந்தப் பணியை ஷுப்மன் கில் செய்தார். அவருக்கு அபாரமான எதிர்காலம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.