ஃப்ரான்சைஸ் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்: சாய் சுதர்சனை போற்றிய ஹர்திக்!

சாய் சுதர்சன்
சாய் சுதர்சன்
Updated on
1 min read

டெல்லி: நடப்பு ஐபிஎல் சீசனின் 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி. இந்த இரண்டு வெற்றிகளிலும் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார் சாய் சுதர்சன். நேற்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் நெருக்கடியான நேரத்தில் நேர்த்தியாக ஆடி 48 பந்துகளில் 62 ரன்கள் குவித்து அசத்தினார். இறுதிவரை ஆட்டம் இழக்காமல் அணியை வெற்றி பெறவும் செய்தார்.

இந்தப் போட்டியில் 54 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது குஜராத். இருந்தும் பொறுப்புடன் இன்னிங்ஸை சாய் சுதர்சன் அணுகினார். சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவர் 22 ரன்கள் எடுத்திருந்தார். காயம் காரணமாக குஜராத் அணியில் இருந்து கேன் வில்லியம்சன் விலகி உள்ள நிலையில் சாய் சுதர்சன் அசத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் அவர்தான் வென்றார். டொமஸ்டிக் கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வருகிறார். தமிழ்நாட்டை சேர்ந்தவர்.

அவரது ஆட்டம் குறித்து குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, “அவர் அபாரமாக பேட்டிங் செய்து வருகிறார். இதற்குக் காரணம் அவரும், அவருக்கு உதவிய அணியின் உதவியாளர்களும் தான். பயிற்சியில் அவரது கடின உழைப்புக்கு கிடைத்த ரிசல்ட்டை தான் நாம் பார்த்து வருகிறோம். எனது கணிப்பு தப்பாக இல்லை என்றால் எப்படியும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஃப்ரான்சைஸ் கிரிக்கெட்டில் அவரது சிறப்பான, தரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அப்படியே அது இந்திய அளவிலும் செல்லலாம்” என பாண்டியா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in