

பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படிநிலையில் டாப் லிஸ்ட் வீரர்களில் கிரேட் ‘ஏ+’-ல் இருக்கும் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ராவுடன் ரவீந்திர ஜடேஜாவும் இணைந்தார். அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா கிரேட் ஏ-வில் இணைந்தனர். இவர்கள் இருவரும் இதற்கு முன்னர் முறையே ‘பி’ மற்றும் ‘சி’ கிரேடில் இருந்தவர்கள். கே.எல்.ராகுல், ஏ கிரேடிலிருந்து ‘பி’ கிரேடுக்கு இறக்கப்பட்டார். சுப்மன் கில் மற்றும் சூரியகுமார் யாதவ் கிரேட் ‘சி’-யிலிருந்து ‘பி’ கிரேடுக்கு முன்னேறியுள்ளனர்.
ஷர்துல் தாக்கூர் ஏற்கெனவே ‘பி’ கிரேடில் இருந்தவர் ‘சி’-கிரேடுக்கு சென்றுள்ளார். குல்தீப் யாதவ், இஷான் கிஷன், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பரத் ஆகியோர் கிரேட் ‘சி’ ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்ட புதிய வீரர்கள் ஆவார்கள்.
ஒப்பந்தத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள்: ரஹானே, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, சஹா, தீபக் சாஹர்.
காயமடைந்து பாதிப் போட்டிகளில் ஆட முடியாமல் போன பும்ராவுக்கு ஏ+ கிரேட், தொடர்ந்து அற்புதமாக ஆடிவரும் முகமது ஷமிக்கு கிரேட் ஏ. டெஸ்ட் போட்டிகளில் நாட்டமில்லாத ஹர்திக் பாண்டியாவுக்கு கிரேட் ஏ, ஜடேஜாவை விட அஸ்வின் சீனியர், டெஸ்ட் போட்டிகளில் பெரிய அளவில் செயல்திறனைக் காட்டுகிறார், ஆனால் இவர் கிரேட் ஏ. ரிஷப் பந்த் எப்போது வருவார் என்பதே நிச்சயமில்லாத சூழலில் அவருக்கு கிரேட் ஏ, சுப்மன் கில்லுக்கு கிரேட் பி. இது ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.