Published : 05 Sep 2017 10:35 AM
Last Updated : 05 Sep 2017 10:35 AM

இலங்கைக்கு எதிரான தொடர் முழுமையானதாக அமைந்தது: இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கருத்து

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர் முழுமையானதாக அமைந்ததாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 5-வது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இலங்கை 49.4 ஓவர்களில் 238 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக லகிரு திரிமானே 67, மேத்யூஸ் 55 ரன்கள் சேர்த்தனர். புவனேஷ்வர் குமார் 5, ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

239 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்தியா 46.3 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. கேப்டன் விராட் கோலி 110, கேதார் ஜாதவ் 63 ரன்கள் சேர்த்தனர். இந்த வெற்றியால் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை இந்தியா 5-0 என முழுமையாக வென்று கோப்பையை கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக புவனேஷ்வர் குமாரும் தொடர் நாயகனாக ஜஸ்பிரித் பும்ராவும் தேர்வு செய்யப்பட்டனர். அவர், இந்த தொடரில் 15 விக்கெட்கள் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறும்போது, “தொடரை 5-0 என வென்றது ஆச்சர்யமாக இருக்கிறது. இளம் வீரர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஒட்டுமொத்தமாக இந்த தொடர் எங்களுக்கு முழுமையானதாக அமைந்தது. நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம்.

இதற்கு முன்னர் குறுகிய வடிவிலான போட்டிகளில் நாங்கள் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களுக்கு மேல் வெற்றி பெற்றது இல்லை. தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தையும் சேர்த்து 6 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளோம். அடுத்து நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் சவாலானதாக இருக்கும். இலங்கை மண்ணில் தற்போது கிடைத்துள்ள வெற்றியானது வீரர்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்” என்றார். - பிடிஐ

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x