Published : 13 Mar 2023 11:49 PM
Last Updated : 13 Mar 2023 11:49 PM

WPL | 5 போட்டிகளில் தொடர் தோல்வியை தழுவிய ஆர்சிபி: கடைசி ஓவரில் டெல்லி வெற்றி

ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி

மும்பை: நடப்பு மகளிர் ப்ரீமியர் லீக் சீசனில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. நடப்பு சீசனின் 11-வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது டெல்லி.

டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. எல்லிஸ் பெர்ரி, 52 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். 4 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். ரிச்சா கோஷ், 16 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார்.

151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை டெல்லி கேபிடல்ஸ் அணி விரட்டியது. மெக் லேனிங் மற்றும் ஷபாலி வர்மாவின் தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. இருந்தும் அதன் பிறகு களமிறங்கிய ஆலிஸ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிசான் கேப், ஜெஸ் ஜோனாசென் ஆகியோர் பொறுப்புடன் ஆடினர். அந்த அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் முதல் நான்கு பந்துகளில் 12 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வெறும் 15 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தார் ஜேஸ். அவர் பிளேயர் ஆப் தி மேட்ச் விருதையும் வென்றிருந்தார்.

ஆர்சிபி தொடர் தோல்வி: நடப்பு மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் சீசனில் பெங்களூரு அணி இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி உள்ளது. இந்த ஐந்து போட்டிகளிலும் அந்த அணி தோல்வியை தழுவி உள்ளது. டெல்லி (இரண்டு முறை), மும்பை, குஜராத், யூபி வாரியர்ஸ் அணிகளுடன் தோல்வியை தழுவி உள்ளது. சிறப்பான அணி அமைந்தும் ஏனோ அந்த அணியால் வெற்றி பெறமுடியவில்லை என ரசிகர்கள் சமூக வலைதள பதிவுகளில் சொல்லி வருவதை பார்க்க முடிகிறது. அடுத்த போட்டியில் ஆர்சிபி வெற்றி பெறும் என நம்புவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x