

மும்பை: நடப்பு மகளிர் ப்ரீமியர் லீக் சீசனின் 7-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. நடப்பு சீசனில் முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தனது வெற்றி நடையை தொடர்கிறது மும்பை அணி.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி, பேட்டிங் தேர்வு செய்து 18 ஓவர்களில் 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் மெக் லேனிங், 43 ரன்கள் எடுத்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ், 25 ரன்கள் எடுத்தார். மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்கை மும்பை விரட்டியது.
இந்தப் போட்டி நடப்பு சீசனில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டி. ஏனெனில் இந்த இரு அணிகளும் தங்களது முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தன. இந்தப் போட்டியை வெல்லும் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும். அதுதான் எதிர்பார்ப்புக்கு காரணம். ஆனால், இந்தப் போட்டியில் மும்பை அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. சாய்கா இஷாக், வோங், ஹெய்லி மேத்யூஸ் என மூவரும் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
மும்பை அணி 15 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முதல் விக்கெட்டிற்கு யஸ்திகா பாட்டியா மற்றும் ஹெய்லி மேத்யூஸ் இணைந்து 65 ரன்கள் எடுத்தனர். அது மும்பை அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. யஸ்திகா 41 ரன்கள் எடுத்தார். ஹெய்லி மேத்யூஸ் 32 ரன்கள் எடுத்தார். நாட் ஸ்கிவர்-பிரண்ட் 23 ரன்களும், ஹர்மன்பிரீத் 11 ரன்களும் எடுத்திருந்தனர்.