Published : 16 Jul 2014 10:00 AM
Last Updated : 16 Jul 2014 10:00 AM
இலங்கை – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேயில் புதன்கிழமை தொடங்குகிறது.
ஏற்கெனவே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட தொடரை தென்னாப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்நிலையில் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு இந்த டெஸ்ட் தொடர் முக்கியமானதாகும். ஏனெனில் கேப்டன் கிரிஸ் ஸ்மித், ஜேக்கஸ் காலிஸ் ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்டனர். ஹசிம் ஆம்லா முதல் முறையாக தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணிக்கு தலைமை வகிக்கிறார்.
ஆஸ்வெல் பிரின்ஸுக்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்க கேப்டனாகியுள்ள வெள்ளையர் அல்லாத வீரர் ஆம்லா என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இலங்கை அணியில் ஜெயவர்த்தனே ஓய்வை அறிவித்த பிறகு களமிறங்கும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும்.
ஒருநாள் தொடரை வென்றுள்ள உற்சாகத்துடன் இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா களமிறங்குகிறது. அணிக்கு முதல்முறையாக தலைமை வகிப்பது குறித்து கருத்துத் தெரிவித்த ஆம்லா, இது தனக்கு கிடைத்த கவுரவம் என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கேப்டன் பொறுப்பு தனக்கு அளிக்கப்படாதது குறித்து மற்றொரு மூத்த வீரர் டி வில்லியர்ஸ் அதிருப்தி தெரிவித்திருந்தார். இது அணியில் பிரச்சினையை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது. எனினும் ஆம்லாவுக்கு அனைத்து வகையிலும் உதவிகரமாக இருப்பேன் என்று டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.
போட்டி நடைபெறும் காலே மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் அதற்கான உத்திகளுடன் களமிறங்க இருப்பதாக இலங்கை கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் கூறியுள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் ஜூலை 24-ம் தேதி தொடங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT