என் கனவு முடிந்துவிடவில்லை: உடைந்துபோன நெய்மார் உருக்கம்

என் கனவு முடிந்துவிடவில்லை:  உடைந்துபோன நெய்மார் உருக்கம்
Updated on
1 min read

முதுகில் காயமேற்பட்டு உலகக் கோப்பை போட்டியிலிருந்து விலகிய பிரேசில் நட்சத்திரம் நெய்மார், தனது கனவு முடிந்து விடவில்லை என்று கூறியுள்ளார்.

தனது அணியினர் உலகக் கோப்பையை சொந்த மண்ணில் வெல்லும் தனது கனவை நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என்று கூறியுள்ளார்.

இது பற்றி பிரேசில் கால்பந்துக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

”என் கனவு முடிந்து விடவில்லை, அது விளையாட்டில் இடையூறு கண்டுள்ளது அவ்வளவே, எனது அணியினர் உலகக் கோப்பையை வெல்லும் எனது கனவை நிறைவேற்றுவார்கள் என்று நிச்சயம் நம்புகிறேன்.

உலகக் கோப்பை இறுதியில் விளையாட வேண்டும் என்பது எனது கனவு, ஆனால் இந்த முறை அது நடக்கவில்லை” என்று நெய்மார் கூறும்போது உணர்ச்சிவசப்பட்டார் குரலில் அழுகையுடன் கூடிய தடுமாற்றம் இருந்தது.

“கடவுளின் விருப்பம் பிரேசில் சாம்பியன் ஆவது. நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். நான் அவர்களுடன் இருப்பேன், பிரேசில் நாடே கொண்டாடும் அந்தத் தருணத்தில் நானும் அவர்களுடன் இருப்பேன்” என்றார் நெய்மார்.

குளோபோ தொலைக்காட்சி இந்த வீடியோவை ஒளிபரப்பியபோது பிரேசில் ரசிகர்கள் கண்களில் கண்ணீர் பெருகியதாக பிரேசில் கால்பந்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in