IND vs NZ 3-வது டி20 | சதம் விளாசிய கில்: இந்திய அணி 234 ரன்கள் குவிப்பு

சுப்மன் கில்
சுப்மன் கில்
Updated on
1 min read

அகமாதாபாத்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 234 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்காக இளம் வீரர் சுப்மன் கில், சதம் விளாசி அசத்தினார். அவருக்கு துணையாக ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் பேட் செய்திருந்தனர்.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் விளையாடி வருகின்றன. இந்த போட்டி அகமதாபாத் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் வெல்லும் அணி தொடரையும் வெல்லும்.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணிக்காக கில் மற்றும் இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர். கிஷன், 1 ரன் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த திரிபாதி உடன் 80 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் கில். ராகுல் திரிபாதி, 22 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து சூர்யகுமார் யாதவ், 13 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

கேப்டன் ஹர்திக் பாண்டியாவுடன் 103 ரன்களுக்கு கில் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 54 பந்துகளில் சதம் விளாசி இருந்தார் கில். மறுமுனையில் பாண்டியா, 17 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் இருந்த கில், 63 பந்துகளில் 126 ரன்களை எடுத்திருந்தார். 12 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்களை அவர் விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்தது. தற்போது 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நியூஸிலாந்து விரட்டி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in