Published : 30 Jan 2023 08:51 AM
Last Updated : 30 Jan 2023 08:51 AM

ஐசிசி யு-19 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று சாதனை

ஐசிசி யு-19 மகளிர் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியினர்.

போட்செஃப்ஸ்ட்ரூம்: ஐசிசி யு-19 மகளிர் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்த இந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் போட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் நேற்று இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 17.1 ஓவரில் 68 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ரியானா மெக்டொனால்ட் 19, அலெக்சா ஸ்டோன்ஹவுஸ் 11, சோபியா ஸ்மால் 11, நியாம் ஹாலண்ட் 10 ரன்கள் சேர்த்தனர். மற்ற வீராங்கனைகள் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை.

இந்திய அணி சார்பில் டைட்டாஸ் சாது, அர்ச்சான தேவி, பர்ஷவி சோப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 69 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 14 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 69 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

கேப்டன் ஷபாலி வர்மா 15,ஸ்வேதா செஹ்ராவத் 5, கோங்காடி த்ரிஷா 24 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். சவுமியா திவாரி 24 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மகளிர் கிரிக்கெட் போட்டியில் ஐசிசி தொடரை இந்திய அணி வெல்வது இதுவே முதன்முறையாகும்.

ரூ.5 கோடி பரிசு ஐசிசி யு-19 மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. பட்டம் வென்ற இந்திய மகளிர் அணியினர், பயிற்சியாளர்களுக்கு ரூ.5 கோடி ஊக்கக் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x