Published : 29 Jan 2023 10:46 PM
Last Updated : 29 Jan 2023 10:46 PM

IND vs NZ 2-வது டி20 | இறுதி ஓவர் வரை சென்ற போட்டி; 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ்

லக்னோ: நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் இறுதி வரை களத்தில் பேட் செய்து அணிக்கு தேவையான வெற்றியை பெற்று கொடுத்தார் சூர்யகுமார் யாதவ்.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் இரண்டாவது டி20 போட்டி லக்னோவில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இருந்தும் அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது.

சுப்மன் கில், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இறுதி வரை நிதானமாக ஆடினார் சூர்யகுமார் யாதவ். 31 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்தார் அவர். இதில் ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அடங்கும். இந்தப் போட்டியில் அவரது வழக்கமானக அதிரடி ஆட்டத்தை பார்க்க முடியவில்லை. 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 101 ரன்களை எடுத்தது இந்தியா.

இந்த வெற்றியின் மூலம் தொடரை 1-1 என சமன் செய்துள்ளது இந்தியா. இந்த தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி வரும் பிப்ரவரி 1-ம் தேதி நடைபெற உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x