Last Updated : 29 Jan, 2023 06:47 AM

 

Published : 29 Jan 2023 06:47 AM
Last Updated : 29 Jan 2023 06:47 AM

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் யு-14 பிரிவில் 5-வது இடம் பிடித்த கோவை வீராங்கனை மாயா

மாயா ராஜேஷ்வரன் ரேவதி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி அமைப்பாளர்கள் கடந்த 2020-ம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளம் டென்னிஸ் நட்சத்திரங்களை மெல்பர்னுக்கு அழைத்துச் சென்று போட்டியில் பங்கேற்க வைப்பதுடன் கிராண்ட் ஸ்லாம் நிகழ்வின் உணர்வை நேரடியாக பெற வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வகையில் ஆஸ்திரேலிய ஓபன்டென்னிஸ் தொடரின் ஒரு அங்கமாக ஆசியா-பசிபிக் எலைட் யு-14 டிராபி மெல்பர்ன் நகரில் கடந்த 25-ம்தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது.

இந்த போட்டிக்காக ஆசியாவிலிருந்து 14 வயதுக்குட்பட்ட பிரிவில்5 சிறந்த வீரர்கள் மற்றும் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பசிபிக் ஓசியானாவிலிருந்து தலா ஒரு வீரர் என 8 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த வகையில் சிறுவர் பிரிவில் 8 பேரும், சிறுமியர் பிரிவில் 8 பேரும் என மொத்தம் 16 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். இதில் சிறுவர் பிரிவில் இந்தியாவின் புனேவைச் சேர்ந்த 14 வயதான அர்னவ் பாபர்கர், சிறுமியர் பிரிவில் தமிழகத்தின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயதான மாயாராஜேஷ்வரன் ரேவதி ஆகியோர் ஆசியா-பசிபிக் எலைட் யு-14 டிராபியில் விளையாட தேர்வாகி இருந்தனர்.

ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்பட்ட இந்த தொடரில் சிறுவர் பிரிவில் அர்னவ் பாபர்கர் இறுதி சுற்றில் 6-3, 6-0 என்ற நேர் செட்டில்தாய்லாந்தின் குனனன் பண்டரடோர்னை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். அதேவேளையில் மாயா ராஜேஷ்வரன் ரேவதி 5-வது இடத்துடன் தொடரை நிறைவு செய்தார். முதல் ஆட்டத்தில் மாயா ராஜேஷ்வரன் 3-6,1-6 என்ற செட் கணக்கில் ஜப்பானின் ஹிகாரியமமோட்டோவிடம் தோல்வி கண்டார். எனினும் 2-வது ஆட்டத்தில் பிரெஞ்சு பாலினேசியாவைச் சேர்ந்த மியா சாங்கை 6-2, 6-2 என்ற நேர் செட்டில் தோற்கடித்தார். கடைசி ஆட்டத்தில் ஹாங் காங்கின் ஜியுன் ஓ-வுக்கு எதிராக போராடிய போதிலும் 6-7, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

இதனால் 5 முதல் 8-வது இடங்களுக்கான ஆட்டத்தில் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் மாயா ராஜேஷ்வரன் ரேவதி. இதில் நியூஸிலாந்தின் யஷ்விதா ரெட்டியை 6-3, 6-2 என்ற நேர் செட்டிலும் ஆஸ்திரேலியாவின் ஜெனிபரை 6-5, 7-5 என்ற நேர் செட்டிலும் வீழ்த்தி 5-வது இடத்தை பிடித்தார்.

மாயா ராஜேஷ்வரன் ரேவதி14 வயதுக்கு உட்பட்டோர் மற்றும்16 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய போட்டியில் சாம்பியன்பட்டம் வென்றுள்ளார். கடந்தஆண்டு இறுதியில் கர்நாடகாவில் நடைபெற்ற ஆசிய ஜூனியர்டூர் சாம்பியன்ஷிப்பில் மாயாராஜேஷ்வரன் ரேவதி ஒற்றையர்பிரிவில் சகமா நிலத்தைச் சேர்ந்ததியா ரமேஷை வீழ்த்தி பட்டம்வென்றிருந்தார். அதேவேளையில் இரட்டையர் பிரிவில் சண்டிகரின்ஸ்னிதா ரூஹிலுடன் இணைந்துகோப்பையை கைப்பற்றியிருந்தார். தனது சிறந்த செயல் திறனால் இந்திய டென்னிஸ் அரங்கில்14 வயதுக்குட்பட்டோர் பிரிவில்முதல் நிலை வீராங்கனையாகவும், 16 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 4-வது இடத்திலும் உள்ளார் மாயா.

மாயாவின் தந்தை ராஜேஷ்வரன் டென்னிஸ் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதிக அளவிலான போட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்கும் பழக்கம் கொண்ட அவர், அந்த ஆட்டங்களினால் ஈர்க்கப்பட்டு தனது மகள் மாயாவுக்கு டென்னிஸ் விளையாட்டை அறிமுகப்படுத்தி உள்ளார். 8 வயதில் டென்னிஸ் மட்டையை கையில் பிடிக்கத் தொடங்கிய மாயா, சரியான வழிகாட்டுதல் மற்றும் சிறந்த பயிற்சியால் குறுகிய காலத்திலேயே வெற்றிகளை குவிக்கத் தொடங்கினார். சிறிதுகாலம் பெங்களூருவில் உள்ளரோகன் போபண்ணா டென்னிஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற மாயா, அதன் பின்னர் மீண்டும் தனதுசொந்த இடத்துக்கே திரும்பி பயிற்சியில் தீவிர கவனம் செலுத்தினார்.

ஆசிய போட்டிகளில் மாயா ராஜேஷ்வரன் ரேவதி 5 முறை பட்டம் வென்றுள்ளார். யு-12, யு-14,யு-16 ஆகிய பிரிவுகளில் தேசிய சாம்பியன் பட்டம் கைப்பற்றி உள்ளார். தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின், வளர்ந்து வரும் இளம் வீராங்கனைக்கான விருதையும் வென்றுள்ளார். தற்போது ஆசியா-பசிபிக் எலைட் யு-14 டிராபியில் அவர், 5-வது இடமே பிடித்த போதிலும் இந்தத் தொடருக்கு தகுதி பெறுவது என்பது எளிதான விஷயம் இல்லை. சர்வதேச தரத்திலான தொடரில் இளம் வயதிலேயே மாயாவுக்கு விளையாட வாய்ப்புகிடைத்துள்ளது. இது அவரது எதிர்கால டென்னிஸ் வாழ்க்கைக்கு பெரிய அளவில் உதவக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x