Published : 27 Jan 2023 05:36 PM
Last Updated : 27 Jan 2023 05:36 PM

அண்டர்-19 மகளிர் T20 WC | இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி

இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள்

பாட்செஃப்ஸ்ட்ரூம்: நடப்பு அண்டர்-19 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது கேப்டன் ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. அரையிறுதியில் நியூஸிலாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இந்த தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. குரூப் டி பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று முதலிடம் பெற்றது.

தொடர்ந்து சூப்பர் 6 குரூப்-1 பிரிவில் 4 போட்டிகளில் விளையாடி அதில் மூன்றில் வெற்றி பெற்றது. அதோடு சூப்பர் 6 பிரிவிலும் முதலிடம் பிடித்தது. அதன் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. நியூஸிலாந்து அணி உடனான இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்தது. இந்திய பவுலர் பார்ஷவி சோப்ரா, 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். தொடர்ந்து இந்திய அணி 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது.

இந்திய அணி 14.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சுவேதா ஷெராவத், 45 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். மொத்தம் 10 பவுண்டரிகளை அவர் விளாசினார். இந்த தொடரில் ஆறு போட்டிகளில் விளையாடி 292 ரன்களை எடுத்துள்ளார் அவர்.

இந்திய அணி வரும் 29-ம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து அணியுடன் விளையாட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x