

ராஞ்சி: இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாளை ராஞ்சியில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் விளையாடும் வகையில் இந்திய அணி ராஞ்சி சென்றுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை சந்தித்துள்ளார் டி20 அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா.
இந்த சந்திப்பின் போது இருவரும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளனர். அந்தப் படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் ஹர்திக். ‘வெகு விரைவில் ஷோலே 2’ என அதற்கு கேப்ஷனும் கொடுத்துள்ளார்.
கடந்த 2016-ல் தோனி தலைமையிலான இந்திய அணியில் ஹர்திக் அறிமுக வீரராக களம் கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஞ்சி நகரில்தான் தோனி வசித்து வருகிறார். பாண்டியா, ராஞ்சி நகரம் செல்லும் போதெல்லாம் தோனியை சந்திப்பது வழக்கம். அந்த வகையில்தான் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இருந்தாலும் இந்தப் படம் எங்கு எடுக்கப்பட்டது என்ற விவரம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
தோனியின் வீட்டில் இந்த சந்திப்பு நடந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. அவரது வீட்டின் கராஜில் உள்ள வாகனங்களில் இது ஒன்றாக இருக்கலாம் என தெரிகிறது. இந்த பைக் அவரது கலெக்ஷனில் ஒன்றாக இருக்கலாம் என தெரிகிறது.
முன்னதாக, தோனியும் பாண்டியாவும் கடந்த நவம்பர் மாதம் பிறந்தநாள் விழா ஒன்றில் நடனம் ஆடி மகிழ்ந்திருந்தனர். இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் ராஞ்சியில் நாளை தொடங்குகிறது.