Published : 24 Jan 2023 10:09 AM
Last Updated : 24 Jan 2023 10:09 AM

நீ எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கவலையில்லை, இன்னொரு முறை இப்படி ஆடினால்...- தோனியை எச்சரித்த ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரி (இடது) தோனி (வலது)

இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் தன் புத்தகத்தில் 2018-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் எம்.எஸ்.தோனி பேட்டிங் மந்தத்தினால் இந்திய அணி தோற்றதையடுத்து ரவி சாஸ்திரி அணி மீட்டிங்கில் தோனியை கடுமையாக எச்சரித்ததைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் போட்டியில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அணி தோற்றது பற்றி ரவி சாஸ்திரி கோபம் அடையவில்லை, எம்.எஸ்.தோனி வெற்றிக்கான எந்த முயற்சியும் செய்யாமல் ஒரு போராட்ட குணமே இல்லாமல் போட்டியை தாரை வார்த்ததுதான் ரவிசாஸ்திரியின் கோபம் என்கிறார் ஆர்.ஸ்ரீதர்.

அந்தத் தொடரின் டி20 தொடரை இந்தியா 2-1 என்று வென்றிருந்தது. ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் வென்ற நிலையில் இரண்டாவது போட்டியில் ஜோ ரூட்டின் 113 ரன்களுடன் இங்கிலாந்து 322 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியா இலக்கை விரட்டும் போது 86 ரன்கள் வித்தியாசத்தில் சரணடைந்தது. விராட் கோலி, சுரேஷ் ரெய்னா பேட் செய்யும் போது இங்கிலாந்து டென்ஷனில் இருந்தது. ஆனால் இருவரும் ஆட்டமிழந்தவுடன் தோனி மீது பொறுப்பு விழுந்தது. ஆனால் தோனி வெற்றிக்கான எந்த முயற்சியும் செய்யாமல் ஆடியதால் இந்தியா தோற்றது. தோனி 59 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து படுமந்தமாக ஆடி அணியைத் தோற்கடித்தார்.

‘Coaching Beyond: My Days with the Indian Cricket- என்ற அந்த புத்தகத்தில் இந்த ருசிகர சம்பவத்தை ஸ்ரீதர் விவரிக்கும் போது, “விராட் கோலி, ரெய்னா ஆட்டமிழந்தவுடன் தோனி மற்றும் பவுலர்கள் தான் கடைசி 10 ஓவர்களை ஆட வேண்டும். ஆனால் எந்த ஒரு போராட்டமும் இன்றி தோனி கடையை ஊற்றி மூடிவிட்டார். ஓவருக்கு 13 ரன்கள் என்பது கடினம்தான், ஆனால் அடுத்த 6 ஓவர்களில் வெறும் 20 ரன்கள்தான் வந்தது. இந்த இன்னிங்ஸில்தான் தோனி தனது 10,000 ரன்கள் மைல்கல்லை எட்டினார். அது குறித்து எங்களுக்கு த்ரில்தான், ஆனால் தோனி ஏன் இலக்கை நோக்கி ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை என்பது குறித்து தெரிந்து கொள்ள விரும்பினோம்.

ரவி சாஸ்திரி கடும் கோபமடைந்தார், தோற்றதற்காக அல்ல, எந்த ஒரு போராட்ட குணமும் இல்லாமல் சரணடைந்ததுதான் அவரது கோபத்தின் மூலவேர். இந்த விஷயத்தை அப்படியே ரவி விட்டு விடுவதாக இல்லை.

கடைசி போட்டி ஹெடிங்லீயில் நடக்கவிருந்த போடு டீம் மீட்டிங் நடைபெற்றது. ஒட்டு மொத்த அணியும் அங்கு கூடிவிட்டது. எனக்குத் தெரிந்து விட்டது ரவி சாஸ்திரி நிச்சயம் கடந்த போட்டியில் தோற்றதைத் தொட்டுக் கடுமையாக பேசுவார் என்று மிகவும் கத்தி கோபமாகப் பேசினார் ரவி சாஸ்திரி.

சாஸ்திரி சொன்னது இதுதான்: ‘இதோ பாருங்கள் நீங்கள் எத்தனை பெரிய வீரராக இருந்தாலும் சரி இன்னொரு முறை வெற்றிக்கான முயற்சி இன்றி சரணடைவது கூடாது, என் தலைமையில் இது நடக்க நான் அனுமதிக்க மாட்டேன். இன்னொரு முறை வெற்றிக்காக ஆடாமல் சொதப்பினால் அந்த வீரருக்கு அதுதான் கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும். போட்டியில் தோல்வியடைவது அவமானமில்லை, ஆனால் இப்படி போராடாமல் தாரை வார்ப்பது கூடாது.

இப்படி ரவி சாஸ்திரி கூறும்போது தோனி அவருக்கு நேர் எதிராக இருந்தார், ஒட்டுமொத்த பேச்சின் போதும் தோனியின் மீதே ரவி சாஸ்திரியின் கண் இருந்தது. ஆனால் தோனியும் தன்னைத்தான் குறிப்பிடுகிறார் என்று கண்ணை தாழ்த்தவில்லை, அவரும் ரவி சாஸ்திரியை நேருக்கு நேர் பார்த்தார். தோனி தன் மீதான குற்றச்சாட்டை ஏற்று கொள்வார் ஏனெனில் தன் இருதயத்தின் ஆழத்தில் அந்த விமர்சனத்துக்குத் தான் தகுதியானவர் தான் என்பது தோனிக்குத் தெரியும்.

இவ்வாறு கூறினார் ரவி சாஸ்திரி. எத்தனைப் பயிற்சியாளர்கள் இப்படி சூப்பர் ஸ்டார் வீரர்களை கடிந்து கொள்வார்கள், சாஸ்திரியினால் முடிந்தது, ஆனால் அதே ரவி சாஸ்திரி, விராட் கோலியை இப்படிக் கண்டித்தாரா என்பதையும் ஆர்.ஸ்ரீதர் அந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறாரா என்பது தெரியவில்லை.

நாம் முன்னமேயே கூறியிருந்தோம் தோனி ஒரு கட்டத்தில் அணியின் வெற்றிக்காக ஆடாமல் விட்டேற்றியாக ஆடினார் என்று எழுதினோம். காரணம், தோனியின் ரசிகர்கள் அவர் எப்படி ஆடினாலும் மன்னித்து விடுவார்கள். அதாவது தோனி 15 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து முக்கியக் கட்டத்தில் ஆட்டமிழந்து விட்டால் தோனி ரசிகர்கள், ‘அவுட் ஆகிவிட்டார் நின்றிருந்தால் ஜெயித்திருப்பார்’ என்று சமாதானம் அடைவார்கள். நின்று ஜெயிக்க வைக்க முடியாவிட்டால், தோனி ரசிகர்கள் என்ன கூறுவார்கள் என்றால், ‘அவர் மட்டும் தான் ஆடணுமா?, மத்தவங்க என்ன செய்றாங்க?’ என்று கேட்டு முட்டுக் கொடுப்பார்கள். இந்த இரண்டு ரசிக மனநிலைகளுக்கு இடையில்தான் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை இருந்தது என்றால் மிகையாகாது. ரவி சாஸ்திரி தோனியின் நோக்கத்தை சரியாகவே கண்டுப்பிடித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x