Published : 19 Jan 2023 02:01 AM
Last Updated : 19 Jan 2023 02:01 AM

''பயிற்சியாளர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்'' - டெல்லியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போராட்டம்

டெல்லி: பெண் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பதவி விலக வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். இவர் நேற்று எழுப்பிய குற்றச்சாட்டு இந்திய விளையாட்டு உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண் மல்யுத்த வீராங்கனைகள் பயிற்சியாளர்களால் பல ஆண்டுகளாகப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இவருக்கு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற சாக்சி மாலிக் மற்றும் பஜ்ரங் பூனியா போன்றவர்களும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் முன், வினேஷ் போகத் அளித்த பேட்டியில், "10-20 பெண் மல்யுத்த வீராங்கனைகள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் பற்றிய தகவல்கள் எனக்குத் தெரியும். இதில் பல பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்கள் அடங்குவர். குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம். அதுவரை எந்தவொரு தடகள விளையாட்டு வீரரும் எந்த நிகழ்விலும் பங்கேற்க மாட்டார்கள்.

பயிற்சியாளர்கள் வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர், மேலும் கூட்டமைப்பிற்கு பிடித்த சில பயிற்சியாளர்கள் பெண் பயிற்சியாளர்களிடமும் தவறாக நடந்து கொள்கின்றனர். சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI), தலைவர் பிரிஜ்பூஷண் சரண் சிங்கும் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களை கொடுத்துள்ளார். அவர்கள் (கூட்டமைப்பு) எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தலையிட்டு எங்களை தொந்தரவு செய்கிறார்கள். எங்களை சுரண்டுகிறார்கள். நாங்கள் ஒலிம்பிக் போட்டிக்கு சென்றபோது, எங்களிடம் பிசியோ அல்லது பயிற்சியாளர் இல்லை. இதற்கு எதிராக குரல் கொடுத்து வருவதாக தொடர்ந்து நாங்கள் மிரட்டப்பட்டு வருகிறோம்" என்று புகார் தெரிவித்தார்.

மேலும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI), தலைவர் பிரிஜ்பூஷண் சரண் சிங் பதவி விலகும் வரை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார். அவருடன் 30 மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பிரிஜ்பூஷண் சரண் சிங், "97 சதவிகித வீரர்கள் எங்கள் பக்கமே உள்ளனர். பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளால் நான் வேதனையடைந்தேன். எந்த வீரரும் என் மீது அல்லது தலைமை பயிற்சியாளர் மீது அந்த குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாது. சில மல்யுத்த வீரர்கள் மீது தர்ணாவில் அமர்வதற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது என்று நினைக்கிறேன். சில நாட்களுக்கு முன்பு, ஒரு கூட்டத்தில், வினேஷ் போகத் தலைமை பயிற்சியாளரை மாற்ற வேண்டும் என்று கோரினார். ஒரு வீரரின் பரிந்துரையின் பேரில் பயிற்சியாளரை வைத்திருக்க முடியாது. பிற மாநில வீரர்களைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். அவர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பயிற்சியாளர்களின் பெயர்களுடன் முன்பே சொல்லியிருக்க வேண்டும். அவர்கள் தெரிவித்த குற்றச்சாட்டுகள் உண்மை என கண்டறியப்பட்டால் தற்கொலை செய்து கொள்வேன்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனினும் வினேஷ் போகத் குற்றச்சாட்டை அடுத்து மத்திய விளையாட்டுத் துறை குறித்து WFIயிடம் விளக்கம் கோரியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x