Published : 16 Jul 2014 10:00 AM
Last Updated : 16 Jul 2014 10:00 AM
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வென்று சாம்பியன் கோப்பையுடன் செவ்வாய்க்கிழமை நாடு திரும்பிய அணி வீரர்களுக்கு ஜெர்மனியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரேசிலில் இருந்து பெர்லின் விமான நிலையத்தில் வந்திறங்கிய ஜெர்மனி கால்பந்து அணியினரை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விமான நிலையத்தில் கூடியிருந்தனர். விமான நிலைய பகுதியே விழாக் கோலம் பூண்டிருந்தது.
விமானத்தில் இருந்து முதலில் கேப்டன் பிலிம் லாம் கோப்பையை கையில் ஏந்தியபடி வெளியே வந்தார்.வரவேற்பாளர்கள் பகுதியில் கூடியிருந்த ரசிகர்கள் கோப்பையுடன் வந்த வீரர்களைப் பார்த்து உற்சாக குரல் எழுப்பினர். பின்னர் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பஸ்ஸில் பெர்லின் நகருக்குள் வந்தனர். வழி முழுவதும் ஏராளமான ரசிகர் கூடி நின்று வீரர்களை வாழ்த்தி வரவேற்றனர்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வென்று சாம்பியன் ஆனது. அப்போது முதலே ஜெர்மனியில் ரசிகர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோப்பையுடன் வீரர்கள் நாடு திரும்பியது, அவர்களின் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பல மடங்கு அதிகரித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT