Published : 08 Jan 2023 06:06 AM
Last Updated : 08 Jan 2023 06:06 AM

துபாய் டென்னிஸ் தொடருடன் ஓய்வு பெற சானியா முடிவு

புதுடெல்லி: வரும் பிப்ரவரி மாதம் துபாயில் நடைபெற உள்ள துபாய் டூட்டி ஃப்ரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடருடன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இந்தியாவின் டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா முடிவு செய்துள்ளார். ஓய்வு முடிவை மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பிடம் சானியா தெரிவித்துள்ளார்.

36 வயதான சானியா மிர்சா கடந்த ஆண்டு இறுதியுடன் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டிருந்தார். ஆனால் முழங்கை காயம் காரணமாக சானியா மிர்சா, அமெரிக்க ஓபன் தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. முன்னதாக அவர்,ஆகஸ்ட் மாதம் முதலே எந்தவித போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார்.

கடந்த 10 ஆண்டுகளாக துபாயில் வசித்துவரும் சானியா மிர்சா, அங்கேயே தனதுபோட்டியை விளையாட முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக சானியா மிர்சா கூறும்போது, “கடந்த ஆண்டுஇறுதியில் டிபிள்யூடிஏ பைனல்ஸ் தொடருடன் ஓய்வு பெற முடிவு செய்திருந்தேன். ஆனால் அமெரிக்க ஓபன் தொடருக்கு முன்னதாகவே எனது முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால் நான் அனைத்திலும் பின்வாங்க நேரிட்டது.

எனது சொந்த முடிவுகளின்படியே விஷயங்களை செய்ய விரும்புகிறேன். காயத்தால் கட்டாயப்படுத்தப்படுவதை நான் விரும்பவில்லை. அதனால் தொடர்ந்து பயிற்சிகள் மேற்கொள்கிறேன். பிப்ரவரி மாதம் துபாயில் நடைபெற உள்ள துபாய் டூட்டி ஃப்ரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடருடன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதே திட்டமாக உள்ளது’‘ என்றார்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இரட்டையர் பிரிவில் 3 முறையும், கலப்பு இரட்டையர் பிரிவில் 3 முறையும் சானியா மிர்சா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அடுத்த வாரம் தொடங்க உள்ள ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் சானியா மிர்சா, கஜகஸ்தானின் அன்னா டானிலினாவுடன் இணைந்து களமிறங்க உள்ளார்.

ஆயிரம் புள்ளிகள் கொண்ட துபாய் டூட்டி ஃப்ரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் வரும்பிப்ரவரி 19-ம் தேதி தொடங்குகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x