பிசிசிஐ தேர்வுக்குழுவில் தமிழகத்தின் சரத்துக்கு வாய்ப்பு

எஸ்.சரத்
எஸ்.சரத்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.சரத் சேர்க்கப்பட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரை இறுதி சுற்றுடன் வெளியேறியதை தொடர்ந்து சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு முழுமையாக கலைக்கப்பட்டது. இந்நிலையில் சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு சேத்தன் சர்மாவையே தேர்வுக்குழு தலைவராக மீண்டும் நியமித்துள்ளது பிசிசிஐ.

சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவில் ஜூனியர் அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த எஸ்.சரத் (தென் மண்டலம்), முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சுப்ரதோ பானர்ஜி (கிழக்கு மண்டலம்), சலில் அங்கோலா (மேற்கு மண்டலம்), முன்னாள் தொடக்க வீரர் ஷிவ் சுந்தர் தாஸ் (மத்திய மண்டலம்) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

தமிழக அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ள எஸ்.சரத், இந்திய அணிக்காக விளையாடியது இல்லை. இளம் வீரர்களின் திறனை கண்டறிவதில் சரத் சிறப்பாக செயல்படக்கூடியவர். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளை அதிகம் கவனித்து வந்துள்ளதால் அவரது ஆழ்ந்த அறிவு, சீனியர் அணியின் மாற்றங்களுக்கு பெரிதும் உதவும் என பிசிசிஐ கருதுகிறது. இதன் காரணமாக அவர், சீனியர் தேர்வுக்குழுவுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in