Published : 05 Jan 2023 11:35 PM
Last Updated : 05 Jan 2023 11:35 PM

IND vs SL 2-வது டி20 | அதிரடியால் ஆறுதல் தந்த அக்சர்: 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இலங்கை

ஷனகா மற்றும் அக்சர் படேல்

புனே: இந்திய அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 207 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 190 ரன்கள் எடுத்து ஆட்டத்தை இழந்தது. இந்த போட்டியில் இந்திய அணிக்காக பேட் செய்த சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல் மற்றும் ஷிவம் மாவி போன்றோர் இலக்கை விரட்டி இலங்கைக்கு பயம் காட்டி இருந்தனர்.

புனே நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை 206 ரன்களை குவித்தது. 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது.

இந்திய அணிக்காக இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில்லும் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். பவர்பிளே ஓவர்கள் முடிவதற்குள் இஷான் கிஷன், கில், ராகுல் திரிபாதி மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். தீபக் ஹூடாவும் 9 ரன்களில் வெளியேறினார்.

57 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. அப்போது களத்திற்குள் வந்தார் அக்சர் படேல். சூர்யகுமார் யாதவுடன் 91 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர். சூர்யகுமார், 51 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் வந்த ஷிவம் மாவி தன் பங்கிற்கு 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களை விளாசி 15 பந்துகளில் 26 ரன்களை குவித்தார். 6 சிக்ஸர்களை விளாசிய அக்சர் படேல் 31 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் வெளியேறினார். கடைசி பந்தில் ஷிவம் மாவியும் விக்கெட்டை இழந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. அதனால் இலங்கை 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1-1 என சமனில் உள்ளது. வரும் 7-ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற உள்ள மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் வெல்லும் அணி தொடரையும் வெல்லும்.

முன்னதாக, இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் முதல் விக்கெட்டிற்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்கள். மென்டிஸ், 31 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். அதன் பிறகு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அக்சர் படேல் மற்றும் சஹல் அபாரமாக பந்து வீசி இலங்கையில் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர்.

ஆனாலும் அது அனைத்தும் கடைசி 5 ஓவர்களில் தலைகீழாக மாறியது. மீண்டும் இலங்கை பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பை தொடர்ந்தனர். 15 ஓவர்கள் முடிவில் 129 ரன்கள் எடுத்திருந்த அந்த அணி கடைசி 30 பந்துகளில் 77 ரன்கள் குவித்தது. இதற்கு காரணம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கன்ட்ரோல் இன்றி பந்து வீசியதுதான். அதிலும் நோ-பால் வீசி பார்வையாளர்களை இம்சித்தனர்.

இலங்கை அணியின் கேப்டன் 22 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார். அசலங்கா, 19 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். அதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 206 ரன்களை குவித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x