Published : 04 Jan 2023 05:11 PM
Last Updated : 04 Jan 2023 05:11 PM

தன்னைக் காத்துக்கொள்ள அக்சர் படேலிடம் கடைசி ஓவரைக் கொடுத்தாரா ஹர்திக் பாண்டியா?

ஹர்திக் பாண்டியா | கோப்புப்படம்

மும்பை - வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி பக்கா பேட்டிங் பிட்ச்சில் 162 ரன்களை தற்காத்து 2 ரன்களில் இலங்கையை வீழ்த்தியதற்குக் காரணம் இந்திய அணிக்கு வந்துள்ள இளம் வேகப்புயல்களான ஷிவம் மாவி மற்றும் உம்ரன் மாலிக்கே காரணம்.

பேட்டிங்கில் இஷான் கிஷன் 37 ரன்கள் எடுக்க. கடைசி 5.5 ஓவர்களில் அக்சர் படேலும், தீபக் ஹூடாவும் 68 ரன்களை விளாசியதும் இந்திய அணியின் வெற்றியில் மிகமுக்கிய பங்களிப்பு செய்துள்ளது.

முதலில் 19-வது ஓவரையே தான் வீசாமல் ஹர்ஷல் படேலிடம் கொடுத்ததால்தான் ஆட்டம் இத்தனை நெருக்கமாக வந்தது. ஆனால், கடைசி ஓவரையும் ஹர்திக் பாண்டியா வீசாமல் அக்சர் படேலிடம் கொடுத்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது அதிர்ஷ்டவசமாக வெற்றியைப் பாதிக்கவில்லை. இருந்தலாலும் ஹர்திக் பாண்டியா 3 ஓவர்கள் வீசி 12 ரன்களே கொடுத்திருந்த நிலையில் தான் ஓவரை வீசாமல் இருந்தது அவரது தப்பித்தல் போக்கு என்றே தெரிகிறது.

13 ரன்களே இலங்கை வெற்றிக்குத் தேவைப்படும் நிலையில் அக்சர் படேலிடம் பந்து வீசக் கொடுத்ததை ஹர்திக் பாண்டியா வேண்டுமானால் ஜெயித்த பிறகு பெரிய சமயோசித முடிவாகவும், அனைத்துச் சூழ்நிலைகளுக்கும் அனைவரையும் தயார் செய்வதற்காகக் கொடுத்ததாகவும் தற்பெருமை பேசிக்கொள்ளலாம். ஆனால், உண்மையில் பார்த்தால் தனது பந்து வீச்சு மீது அவருக்கு நம்பிக்கை இல்லை என்றே தெரிகிறது. அதுவும் கடைசி ஓவரை வீசும் தைரியம் அவருக்கு இல்லை. ஏடாகூடமாக எதுவும் நடந்தால் அக்சர் படேலை நம்பிக் கொடுத்தார். அக்சர்தான் மோசமாக வீசி ஆட்டத்தைத் தோல்விடையச் செய்தார் என்றே வெகுஜன கருத்து தோன்றும். இதனை அறிந்தேதான் ஹர்திக் பாண்டியா வீசாமல் இருந்திருக்கிறார் என்று நாம் யோசிப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

அக்சர் படேலிடம் கொடுத்தது பெரிய ரிஸ்க் என்னவெனில் சமிகா கருணரத்னே ஒரு சிக்சருடன் 15 ரன்களில் கிரீசில் இருக்கிறார், இவர் 2 சிக்சர்களை விளாசிய இருந்தால் ஆட்டம் காலியாகி இருக்கும். அப்படி காலியாகி இருந்தால் ஹர்திக் பாண்டியா இப்போது பேசும் பெருமையை, பரிசோதனை முயற்சி செய்ததாகக் கூறிக்கொள்வாரா. அல்லது அனைத்து சூழல்களுக்கும் பவுலர்களைத் தயார் செய்ய வேண்டும் என்று இப்போது கூறியது போல் கூறியிருப்பாரா? என்பதுதான் நம் கேள்வி.

கருணரத்னே ஒரு சிக்சரை அனாயசமாக அடித்தார். தன் முன் காலை விலக்கிக் கொண்டு மிட் விக்கெட் மேல் வைத்தார் ஒரு வை, பந்து சிக்ஸ். 3 பந்துகளில் 5 ரன்கள் தேவை என்ற நிலை. ஒரு பவுண்டரி அடித்திருந்தாலும் போதும். இந்திய அணியின் கதை அவ்வளவுதான். அடுத்த பந்து வரும் முன் கண்டபடி அவர் நகர்ந்தார். கடைசியில் அக்சர் படேல் பந்தை வைடு என்று நினைத்து ஆடாமல் விட்டார், அது வைடு அல்ல. கடைசி பந்தில் 4 ரன்கள் தேவை , அக்சரின் பந்து 109 கிமீ வேகம் கருணரத்னேவால் மிட் விக்கெட்டைத் தாண்டி அடிக்க முடியவில்லை. எப்படியோ வென்று விட்டது இந்திய அணி.

ஆனால், தன் முடிவை நியாயப்படுத்திய ஹர்திக் பாண்டியா, “இங்கும் அங்குமாக ஓரிரு போட்டிகளை நாம் தோற்றிருக்கலாம். அது பிரச்சனையல்ல. இந்த அணியை கடினமான சூழ்நிலைகளில் ஆட வைக்க விரும்பினேன். பெரிய போட்டிகளில் இது உதவும். இருதரப்பு தொடர்களில் நாம் நன்றாகவே ஆடுகிறோம். எனவே இப்படித்தான் நம்மை நாமே சவாலுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். உள்ள படியே கூற வேண்டுமானால் இன்று இளம் வீரர்கள்தான் வெற்றி தேடி தந்தனர்” என்று தன்னுடைய கேப்டன்சியை திறமையாக ஹர்திக் பாண்டியா காட்டிக் கொள்கிறார், இதுவும் வென்றதனால்தான்.

“இப்படித்தான் நம்மை நாமே சவாலுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று ஹர்திக் கூறுகிறார், அப்படியென்றால் அவர் அல்லவா கடைசி ஓவரை வீசியிருக்க வேண்டும்? முதலில் கேப்டன் ஒரு கேப்டனாக தன்னை சவாலுக்கு இணையாக நிறுத்துவதுதானே கேப்டன்சி. தனக்கு ஓவர் இருக்கும் போது எங்கு நாம் வீசி தோற்று விடுவோமோ என நினைத்து, நமக்கு எதற்கு கெட்டப் பெயர் என ஒதுங்கிக் கொண்டு, அக்சர் படேலிடம் கொடுத்து அவர் ஓவரில் தோற்றால் பரவாயில்லை என்று ஹர்திக் பாண்டியா மனம் நினைத்திருக்கலாம் என்ற சந்தேகம் நமக்கு எழுவது இயல்பே.

இவருக்கு ஓவர் இல்லை என்றால் பரவாயில்லை, அல்லது தான் வீசிய 3 ஓவர்களில் தன்னை சாத்தி எடுத்து விட்டார்கள், எனவே இன்று நம் தினமில்லை ஆகவே வேறு பவுலர் வீசட்டும் என்று அக்சரிடம் கொடுத்திருந்தாலும் பரவாயில்லை எனலாம். ஆனால், ஹர்திக் பாண்டியா 3 ஓவர்களில் 12 ரன்களைத்தான் கொடுத்துள்ளார். பின் ஏன் கடைசி ஓவரை அவர் வீசாமல் அக்சர் படேலிடம் கொடுத்தார்? இங்குதான் அவரது பவுலிங் மீது அவருக்கே சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்று நம்மை நினைக்கத் தூண்டுகிறது.

மேலும் ஹர்திக் பாண்டியா கேப்டன்சி மீது சந்தேகம் எழுப்பும் இன்னொரு விஷயம் கடைசி 2 ஓவர்களில் 29 ரன்கள் வெற்றிக்குத் தேவை எனும் போதாவது ஹர்திக் பாண்டியா வீசியிருக்க வேண்டும், ஆனால் ஹர்ஷல் படேலிடம் கொடுத்தார், அவர் அந்த ஓவரை படுமோசமாக வீசினார். நோ-பால், வைடு, 2 புல்டாஸ், ஒரு பந்தை தன் காலின் கீழேயே பிட்ச் செய்தது போல் ஷார்ட் பிட்ச் பந்தை வீசினார். இதனால்தான் கடைசி ஓவரில் 13 எனும் நிலை ஏற்பட்டது. இப்போதாவது ஹர்திக் பாண்டியா தானே கடைசி ஓவரை வீச முடிவெடுத்திருக்க வேண்டும். ஆனால் அக்சர் படேலுக்கு அக்னிப்பரிட்சையை கொடுத்து தான் ஒதுங்கி விட்டு அணி வீரர்களை சவாலுக்கு தயார் படுத்துகிறேன் என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

முதலில் கேப்டன் அதுவும் ஒரு ஆல்ரவுண்டர், பவுலிங் வீசத் தெரிந்தவர். ஐபிஎல் தொடர்களில் நிறைய பிரஷர் சூழ்நிலைகளைப் பார்த்தவர் ஹர்திக். அவர் வீசாமல் 19வது ஹர்ஷல் படேலிடம் கொடுத்து செய்த தவறு போதாதென்று கடைசியில் அக்சர் படேலை வீச அழைக்கிறார் என்றால் ஹர்திக் பாண்டியா போல ஒரு பயம் கொண்ட சுயநலவாத கேப்டன் இந்திய அணியை உயரத்துக்குக் கொண்டு செல்ல முடியுமா என்ற கேள்வியே எழுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x